பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

என்கிற கணவனின் அனுபவ பாத்தியதை பண்ணையாரின் மானம்.

அவளை அவர் கொன்றிருப்பார்! ஆனால், துணிவில்லை. சவுக்கெடுத்து அடித்தார். அடி அடி என்று அடித்தார். சேலை அவிழ்த்து விழும்படியாக அடித்தார். அவள் மேனி யெங்கும் தடுப்பு தடுப்பாக கன்னிப் போவதைக் கண்டு சிரித்தார், பெண் முன்னால் பேசத்தகாது என்று சமுதாய தர்மம் சொல்கிற கேவலமான-மிருகத்தனமான-வார்த்தைகளை யெல்லாம் பெண்ணிடமே சொல்லி ஏசிச் சிரித்தார். அவளிடம் அவர் சொல்லலாம்! அவர் மனைவி அவள், மனைவி என்றால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவளிடம் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்று லைசென்ஸ் கொடுத்துள்ள சமுதாய ஜந்துக்களில் ஒருவரான கணவன் தானே பண்ணையாரும்!

கணவனை முன்பே விரும்பாத குமரி இப்பொழுது விரும்ப முடியுமா? அந்த வீட்டை விட்டு வெளியேறி தங்தையிடம் அடைக்கலமானாள்.

‘அவள் ஓடிப்போய்விட்டாள்’ என்று கதை எங்கும் பரவியது. வாழாவெட்டி என்று சமூகத்துப் பெரியார்கள் ஏசினார்கள். அவள் வாழ்வை பாழ்படுத்தி இன்பத்தை வெட்டி அவளை உருப்படாதவளாக மாற்றியது தாங்கள் தான் என்பதை உணரமுடியாத உத்தமர்கள் அவர்கள்! பிறர் வம்பு பேசுவதே அவர்களுக்கு இன்பம்.

ஓடிவந்த மகளே ஏசிப்பேசி புருஷன் வீட்டிலே திரும்பச் சேர்க்காத தந்தை அவளை ‘பயன்படுத்தி’க் கொள்கிறார் என்ற வதந்தி பரப்பப்பட்டது.