பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'பெருஞ்சித்திரனாா்

15

தந்தை பெரியாரின் சிந்தனை வெளிப்பாடுகள்:

இந்த முயற்சிகளைத் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலேயே, அவர் முழுமையாக எண்ணியிருந்தாலும், தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனைகள்.இந்த இனத்தின் முன்னேற்றக் கருத்துகள் இப்போதைய முன்னேற்றத்திற்கு மட்டுமன்று, இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவையானவை. இதற்கு யாரும் மாற்றுக்கருத்துக் கூற முடியாது. வேறு எவரும் இத்தகு எதிர்ச் சிந்தனையைச் செய்து விட முடியாது. எவை எவை நல்லவை என நினைத்துக் கொண்டிருந்தோமோ, அவையெல்லாம் நம்மை அடிமைப்படுத்தும் கூறுகள் என அவரைப்போல் வேறு யாரும் எடுத்துக் கூறியிருக்க முடியாது.

'திருமணமா, அது எதற்கு? தேவையில்லை' எனக் கூறுவார். 'கலையா, அது எதற்கு?’ என்பார் எந்தக் கலைகள் உயர்ந்தவை என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ, அவையெல்லாம் இந்த இனம் தாழ்ந்து போனதற்கான காரணங்களென்று வெளிப்படையாகக் கூறியவர். அவர் இதுபோல வேறு எந்த இனத்திலும், இந்தியாவில் மட்டுமன்று, உலக அளவிலேயே இம் மாதிரிச் சிந்தனைகள் இதுவரை தோன்றவில்லை. அப்படித் தோன்றியிருந்தால், யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த இனத்திலே இவர் இருந்தார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒருவருமில்லை. அந்த அளவுக்கு அம்மணமாகச் சிந்தித்தவர் எந்த வகையான உலகியல் பூசல்களும் ஒட்டாதபடி ஒதுக்கி தனிச் சிந்தனையாகப் பிரித்துச் சிந்தித்தவர். இதில் யாரும் ஐயுற முடியாது. அவரது சிந்தனையைத் தவறானது என்று யாராவது சொன்னால், அவருடைய கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/25&oldid=1163210" இலிருந்து மீள்விக்கப்பட்டது