பக்கம்:ஓ மனிதா.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

ஓ, மனிதா!

காட்டிய இடத்தில் கையெழுத்தும் போடும் அளவுக்கு ‘உயர்ந்’திருக்கிறார்.

இதுவே ‘அரசு’ என்று ஒன்று பிறந்து அந்த அரசு முடியரசாகி அப்புறம் குடியரசான கதை.

எந்த ஆசாமியாயிருந்தால்தான் என்ன, அந்த அரசு உன்னை எப்படி அடக்கி ஆளுகிறது?—அது தான் விஷயம்!—உன்னில் சிலரைப் பிடித்து, ‘காவற் படை’ என்று ஒன்றை அது அமைக்கிறது. அந்தப் படைக்கு மேல் கீழ்க்கோர்ட் மேல்கோர்ட் சுப்ரீம் கோர்ட் என்று என்னென்னவோ கோர்ட்டுகள்...

முடிவு?

உன் மனதை நீ கட்டுப்படுத்த முடியாமல் ஏதாவது தப்புத் தண்டா செய்தால் போதும், உன்னில் ஒருவன் வந்து உன்னைப் பிடிக்கிறான்; உதைக்கிறான்; சிறையில் தள்ளுகிறான்; தூக்கு மேடையிலும் ஏற்றி ‘ஓம் சாந்தி’ என்று சொல்லி விடுகிறான்!

எதற்கு?

‘எல்லாம் உனக்காக, உன் சமுதாயத்துக்காக’ என்கிறான் அவன்; நீ என்ன சொல்கிறாய்?

ஒரு பாவமும் அறியாதவன் நான். ஐந்து வருடத்துக்கு ஒரு முறை—அதாவது, வோட்டுப் போடும் அன்றைக்கு மட்டும் நான் இந்த நாட்டு மன்னனாக்கப்படுகிறேன். அதற்குப்பின் ‘மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மதிப்புமிகு எம். எல். ஏ., எம். பி.க்களுக்கும் அடிமையிலும் அடிமையாக இருக்கிறேன்’ என்கிறாயா?

அதனால் என்ன, ‘ஏக் தின் கா சுல்தா’னாகவாவது உன்னை இருக்க விடுகிறார்களே, அது போதாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/119&oldid=1371354" இலிருந்து மீள்விக்கப்பட்டது