பக்கம்:ஔவையார் கதை.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

39


பாட்டு

“முத்தெறியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்ந்து
தத்திவரு நெய்பால் தலைப்பெய்து—குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவிற் கொண்டோடி வா.”

வசனம்

என்று பாடியருளினார். அவ்வாறே ஒளவையாரின் விருப்பப்படி, அவ் ஆறு பெருகி வந்த மக்களுக்கு ஆராத இன்பத்தை அளித்தது. பின்னர் ஒளவையார் அத் திருமணத்திற்கு வந்திருந்த வறியவர் அனைவர்க்கும் பொன்னும் பொருளும் வழங்க எண்ணினார். உடனே வருணனை நோக்கி,

பாட்டு

“கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனை மாமலையன் கோவல்—பெருமணத்தில்
நன்மாரி தான்கொண்ட நன்னீர் அதுதவிர்த்துப்
பொன்மாரி யாகப் பொழி.”

வசனம்

என்று பாடியருளினார். அவ்வளவுதான். திருக்கோவலூர் முழுதும் பொற்காசு மழை பெய்தது. மணத் திற்கு வந்திருந்த ஏழை எளியவரெல்லாம் தாம் வேண்டு மட்டும் பொன்னை வாரிக்கொண்டு, “வறுமை நீக்கிய வனிதையர் வாழ்க! வாழ்க!” என்று வாயார வாழ்த்திய, வண்ணம் தத்தம் ஊரை அடைந்தனர். பின்னர் ஒளவையார் தம்முடைய வேண்டுகோட்கு இணங்கிப் பாரிமகளிரை மணம்புரிந்து மகிழ்ந்தேற்ற மன்னன் தெய்வீகனையும், அவனது திருநகரத்தையும் வாயார மனமார வாழ்த்தியருளினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/39&oldid=507928" இலிருந்து மீள்விக்கப்பட்டது