பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

89



முற்றத் துறந்த துறவோர்கள் வேந்தனையும் துரும்பாகக் கருதுகிற மனபரிபக்குவ நிலையினை உடையவர்களாக இருக்கிறார்கள்.

வேந்தன் ஒருவன் துறவியின் ஏழைமையையும், தன்னுடைய ஆடம்பரத்தையும் சுட்டிக் கூறியபோது அவனுக்கு அறிவுரை பகருகின்றார் ஒளவையார் என்று இதனைக் கூறுவர்.

போந்த வுதாரனுக்குப் பொன்துரும்பு சூரனுக்குச்
சேர்ந்த மரணம் சிறுதுரும்பு - ஆய்ந்த
அறவோர்க்கு நாரி யருந்துரும்பாம் இல்லத்
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

"ஈகைக் குணத்தோடு பிறந்தவனுக்குப் பொன்னும், சாவைப் பொருட்படுத்தாத வீரனுக்கு வந்தடையும் மரணமும், ஆய்ந்து தெளிந்த அறவோர்களுக்குப் பெண் மயக்கமும், வீட்டைத் துறந்து சென்ற துறவியர்க்கு வேந்தனின் செல்வச் செல்வாக்கும் துரும்பாகவே தோன்றும்" என்பது பொருள்.

65. கெட்டு விடும்!

வாழ்வு பலப்பல திறத்தது. அதனிடையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையினை ஒட்டியபடியே வாழ்கின்றோம். அவரவர் அவரவருடைய நிலைக்கு ஏற்பச் செய்யும் காரியங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையானால் அவ்வாழ்வு கெட்டுவிடும்.

வேந்தன் மக்களிடம் வரி வாங்கும் உரிமை உடையவன், ஆனால் தன் உரிமையை எல்லைமீறிச் செயற்படுத்தினால், மக்களை வாட்டி வதைத்து அநியாயமாக வரி வாங்கினால், அவன் கெட்டழிந்து போவான்.

இரவலன், பிறரிடம் சென்று யாசித்து நிற்பவன். அவர்கள் மனமுவந்து தருவதனை நன்றியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் செயலைப் பாராட்டவும் வேண்டும். இட்டதனைப் பெற்றும் மெச்சத் தெரியாத இரவலன் கெட்டழிந்து விடுவான்.

கற்புடைய பெண்ணுக்கு நிறைந்த நாணமே அணிகலன் ஆகும். முற்றவும் நாணமுடையவளாகத் தன் கணவன் ஒருவனையன்றிப் பிறனை ஏறெடுத்தும் காணாத குணமுடன் விளங்குதல் வேண்டும். அப்போதுதான் அவள் கற்பு சிறக்கும்; நாணத்தை மறந்தால், இக் காலத்துப் போலக் 'கிளப் லைவ்' வாழத் தொடங்கிவிட்டால், அவள் கெட்டு அழிவாள்.

வேசியின் தொழில், பொருள் தருகின்ற ஆடவரை இன்புறுத்தி மகிழ்விப்பது. அவர்களை மயக்கி தன்பால்