பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

15



கொடையினால் நாட்டின்கண் பரவுகின்ற புகழையும் அதனால் தமக்கு உயர்கின்ற பேற்றையும் கருதி, கொடுக்கும் குணமற்ற சிலரும்கூடக் கொடுக்கும் வழக்கம் உடையவராக மாறினர்.

சோழன் கொடையின் மரபினை அறியாதவன் அல்லன். மரபினை அறிந்ததுடன் அதனைப் பேணி நிகழ்த்தியும் சிறப்புப் பெற்றிருந்தான். எனினும், ஒருநாள் அவனுக்கு ஓர் ஐயம் எழலாயிற்று. அருகிலிருந்த ஒளவையாரிடம் அதற்கு விளக்கமும் கேட்கலானான்.

"அம்மையே! வாழ்வில் இச்சை உடையவர்கள் மனிதர்கள். அவர்கட்குப் பொருளினால் பயன் உண்டாகும். அவர்கட்குப் பொருளை வழங்குவதும் தகுதியுடையதாகிறது. ஆனால், சிவனடியார்கள் சிலரும் வந்து பொருள் கேட்கின்றனரே? உலக இச்சையை ஒழித்து இறையின்பத்திலே திளைக்கும் அவர்கட்குப் பொருள் வழங்குவது முறையா? அந்தப் பொருள் அவர்களுடைய சிவ ஒழுக்கத்தையே மாற்றிவிடாதா?" என்றான்.

சோழனின் அறிவுநுட்பம் ஒளவையாரைச் சிந்திக்க வைத்தது. அவர் விளக்கம் கூறலானார்.

“மன்னவ! செல்வத்தைச் சிவனடியார்க்கு வழங்க வேண்டுமோ என்கிறாய்? அவர்கள் அதனைச் சிவகாரியங்களாகிற பொது நன்மைக்கு உதவுகிறவற்றிலேதான் செலவிடுவர். அதனால், அவருக்கு அளிக்கும் கொடை அளவற்ற பலருக்கும் அளித்த கொடையாகிப் பரந்த புகழினை நினக்குத் தருகிறது. இதனை எண்ணினால், அவருக்கு மனமுவந்து வாரி வழங்குதலே செய்ய வேண்டியதாகும் என்பேன் யான்.

அவருக்கு வழங்காத செல்வங்கள் வேறு என்ன வகைக்குப் பயனாகப் போகின்றன? பில்லி சூனியக்காரர்களுக்குப் பயன்படலாம். பேயூட்டுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். பரத்தையர்கட்கு வழங்கி அவரைக் கூடி இன்புற்றுக் கெடலாம். வீண் செலவுகள் செய்யலாம். கொள்ளைக்காரர்களுக்கு விருந்தாகலாம். மனத்தை மயக்கும் கள்ளுக்கு விலையாகத் தரலாம். அல்லது பகை அரசரால் எடுத்துக் கொள்ளப்பட்டும் போகலாம். கள்ளருக்குக் கவர்ந்து போவதற்கும், நெருப்பிற்கு உணவாவதற்கும் கிடைக்கலாம்.

இவற்றால் ஆகும் சிறப்பென்ன? அதனால், இவற்றிற் பாழாகிற பணத்தை தடுத்து "நம்பன் அடியவர்க்கு நல்குவதே சிறப்புடைய செயலாகும்.”