பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

33


வெள்ளம் அவற்றையே அமுதமாக்கின. அவர் மனம் பெரிதும் அவர்களுடைய அன்பில் கலந்துவிட்டது. அந்த உணவை வியந்து பாடினார்.

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ்
செறியாதோ கைக்கு.

"சூடாகவும், நறுமணம் கொண்டதாகவும், விரும்பும் அளவுக்குத் தின்பதற்குத் திகட்டாததாகவும் நெய்விட்டு அளாவிப் பசுமை நிறமுடையதான இதனைப் பொய்யாகக் கீரைக்கறி என்று சொல்லி அமுதத்தையே படைத்தார்கள். இங்ஙனம் ஆக்கிப் படைத்த இவர்களுடைய கைகள் கடகஞ் செறியப் பெற்றவை ஆகாவோ?" என்பது பொருள்.

கேழ்வரகுக் களியும் முருங்கைக் கீரையும்தான் அவர்கள் ஆக்கிப் படைத்தனர். அந்த எளிய உணவும் அவர்களுடைய அன்பின் சிறப்பால் அமுதாகத் தோன்றுகிறது ஒளவையாருக்கு. அதனை வியந்ததுடன், அவர்களின் ஏழைமை தீராதோ எனவும் வாழ்த்துகின்றார். தம் வாழ்த்தை அவரே பின்னர் உண்மையாக்குவாராக நிறைவேற்றியும் மகிழ்கின்றார்.

இச்செய்யுளின் இறுதி அடி, 'கடகஞ் செறிந்த கையார்' எனவும், 'கடகஞ் செறிந்த கையால்' எனவும் வழங்கும்.

21. வாராயேல் சபிப்பேன்!

ந்தப் பெண்களுடைய அன்பினை வியந்து பாடினார் ஒளவையார். அவர்களைப் பாரியின் மகளிர் என்று அறிந்ததும் பெரிதும் கவலை கொண்டார். அவர்களின் எளிய நிலையைக் கண்டுகண் கலங்கினார்.அவர்களை வாழ்விக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

அவர்களுடைய காதலர்கள் திருக்கோவலூர் மலையமானின் மக்கள் என்று தெரிந்து கொண்டார். அவர்களின் விருப்பப்படி அவர்களுக்கு மணமுடித்து வைக்கவும் திட்டமிட்டார்.

அவரை ‘ஒளவையார்’ என்றறிந்த அந்தப் பெண்களும் பெரிதும் மகிழ்ந்தனர். அவருடன் திருக்கோவலூர் செல்லவும் இசைந்தனர்.

திருக்கோவலூர் வந்து மலையமானின் மக்களிடம் கலந்து பேசி, திருமண உறுதியும் செய்துகொண்டார் ஒளவையார். அதன்பின், திருமண ஓலையினை எழுதுவதற்கு விக்கினங்களைப் போக்கியருளும் விநாயகப் பெருமானையே அழைக்கின்றார்.