பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

49



அங்கிருந்த ஒளவையார், “ஏசிக்கொண்டே கொடுப்பதை காட்டினும் அவன் ஏதும் கொடுக்காமல் இருந்து விடுவதே உத்தமம்" என்றனர்.

அடுத்தபடியாக, மனைவியரைப் பற்றிய ஒரு கேள்வி எழுந்தது. "என் மனைவி மிகவும் நல்லவள். ஆனால் எதிர்த்து நின்று பேசுகிற பழக்கம் உடையவளாக இருக்கிறாள். அவளைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டார்.

“எதிரில் நின்று கணவனின் பேச்சுக்குப் பேச்சு எதிர்ப்பேச்சு பேசுகின்ற மனையாளைக் காட்டினும், பேய் மிகவும் நன்மை தருவது?” என்றார் ஒளவையார்.

“ஒருவன் என் நண்பனாக இருக்கின்றான். என்னுடன் அடிக்கடி அன்புடன் பேசுகின்றான்.அவனை நண்பனாக என்னால் ஏனோ கருத முடியவில்லை. அவனுக்கு என்பால் உள்ளன்பு கிடையாது என்பது மட்டும் புலனாகின்றது. இதனைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்றான் ஒருவன்.

“சொல்வதற்கு என்ன இருக்கிறது? உண்மையான அன்பு தானே நட்பின் அஸ்திவாரம். அஃது இல்லாத நண்பன் நண்பனே அல்லன். அவனுடைய நட்பினைக் காட்டிலும் பகைமையே மிகவும் மேலானது” என்றார் ஒளவையார்.

வாழ்வு என்பது, இன்பமாக மகிழ்வுடன் வாழுகின்ற வாழ்வு தான். அஃதின்றி, வாழ்வு துன்பமுடையதாகவும் இன்பமற்றும் இருக்குமாயின், அந்த வாழ்வினால் பயன் யாதும் இல்லை.

வாழ்வு இன்பமாக நிகழ்தற்குப் பொருள் வேண்டும். பொருள் குறைந்தால் வாழ்வில் இனிமையும் குன்றும். வாழ்வின் இனிமை குறையும்போது துயரங்கள் அங்கே குவிந்துவிடும். இதுபற்றியே, 'பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகில் நல்வாழ்வு கிடையாது’ என்று திருக்குறள் கூறுகின்றது.

இவ்வாறு, வாழ்வற்றுப்போய் அடுத்தடுத்து வரும் சங்கடங்கள் ஒருவனுடைய வாழ்விலே மிகுமானால், அவன் அவற்றை ஏற்று நொந்து கழிவதைவிடச் சாதலே நன்மையாக இருக்கும்.

இந்தச் செய்யுளில், ஒளவையார் சில அரிய செய்திகளை உலகுக்கு உரைக்கின்றார்.

ஏசியவாறு கொடுப்பது ஒன்று. கொடையின் பயன் இரந்தவனுக்குக் கிடைப்பதாயினும், அது கொடுப்பவன் மனம் விரும்பிக் கொடுக்காத தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆகவே, அப்படிக் கொடுத்துக் கொடையின் பயனான புகழினை இழந்து