192
கங்கா
அவள் விழிகளில்-அவள் விழிகளே சற்று மேட்டு விழிகள்-மங்கிய தழல் பிழம்பிற்று. விடுவிடெனக் கிண்ணங்களை நிரப்பி என் தட்டைச் சுற்றி வைத்து விட்டுச் சரேலென அவ்விடம் விட்டகன்றாள்.
நான் சாப்பிடவில்லை. வாசலில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
குழம்புக்கொரு கிண்ணம்.
ரஸ்த்துக்கொரு கிண்ணம்.
மோருக்கொரு கிண்ணம்.
ஆர்மோனியப் பெட்டியின் பல்லை அமுக்கினாற் போல் கிண்ணங்களின் பல்லவி தன்னைத்தானே வாசிக்க ஆரம்பித்து விட்டது.
மறுநாள் முழுதும் அவள் தென்படவில்லை. அவள் அரவங்கள் கூடக் கேட்கவில்லை. வேலை அதிகம் என்று சாப்பிடாமலே ஆபீஸுக்குப் போய்விட்டேன். மணி மூன்றிருக்கும். எதிர் வீட்டுச் சீமாச்சு இறைக்க இறைக்க என் nட்'டுக்கு ஓடி வந்தான்.
"மாமா மாமா ! உங்களைப் பாட்டி கையோடு அழைச்சுண்டு வரச்சொன்னா."
வயிற்றில் புளியைக் கரைத்தது. "வீட்டில் எல்லோ ருக்கும் உடம்பு சரிதானேடா !”
"அதென்னமோ தெரியாது ! உங்களை அவசரமா அழைச்சுண்டு வரச்சொன்னா.”
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை. நான் உள்ளே நுழைந்ததுமே வீட்டில் ஒளியின்மை தெரிந்துவிட்டது. உள்ளிருந்து அம்மா வந்தாள். பயத்தில் அவள் விழிகள் வட்டங்களாயிருந்தன;