பக்கம்:கடற்கரையினிலே.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நக்கீரர்

13


புலவன்; மதுர மொழியன். அவன் 'பாட்டைக் கேட்டிருப்பாய் கடலே !

"செந்தில் ஆழியே! உன்னைக் கண்டார் எல்லாம் - உன் காற்றை உண்டோர் எல்லாம் - உன்னைப் பாராட்டிப் போற்றினர். குமரிக் கடல்போல் நீ கொடுங்கடல் அல்லை; உன் கரையில் நின்று குமுறினார் எவரும் இலர். தமிழகத்தில் உள்ள கடற்கரையூர்களை யெல்லாம் நான் கண்குளிரக் கண்டுள்ளேன். பட்டினம் என்று புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரையை நான் அறிவேன். அங்கு மலை போன்ற மரக்கலங்கள் அலைகடலில் நீந்தி வருதலும் போதலும் ஆனந்தமான காட்சியே. ஆயினும், அக்கரையில் எப்போதும் ஆரவாரம் ! அல்லும் பகலும் ஓயாத பண்ட மாற்று! அமைதியை நாடுவார்க்கு அக் கடற்கரையில் இடமில்லை. எம்மருங்கும் வணிகர் கூட்டம்; பொருளே அவர் நாட்டம். உன்னிடம் ஆரவாரம் இல்லை. அமைதி உண்டு. பரபரப்பு இல்லை; பண்பாடு உண்டு; மரக்கலத்தால் வரும் பொருட்செல்வம் இல்லை; அதனினும் மேலாய அருட்செல்வம் உண்டு.

" காண இனிய கருங்கடலே ! அதோ ! கிழக்கு வெளுக்கின்றது. நீல வானமும் நீயும் கூடுகின்ற


1. வேந்துமேம் பட்ட பூந்தார் மாற !

............

நீநீடு வாழிய, நெடுந்தகை ! தாழ்நீர்
வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுவாழ் எக்கர் மணலினும் பலவே."

புறநானூறு 55
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/15&oldid=1247436" இலிருந்து மீள்விக்கப்பட்டது