பக்கம்:கடற்கரையினிலே.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கடற்கரையிலே


மனந்தளர்ந்தார். அன்று மலர்ந்த செந்தாமரையை ஒத்தது டுப்ளேயின் முகம் !மாலைக்கமலம் போல் வாடிக் குவிந்தது மார்ஸின் முகம். இந்தக் கோலத்தில் வெற்றி பெற்ற கவர்னரும் தோல்வியுற்ற கவர்னரும் புதுவையின் வீதி வழியே சென்ற காட்சிக்கு நிகரான தொன்றை நான் என்றும் கண்ட்தில்லை. மறுநாள் டூப்ளேயின் மாளிகைக்குச் சென்றேன். ஆனந்த மயமாக விளங்கிய அவர் 'ஆனந்த ரங்கரே, வாரும்' என்றழைத்தபோது நான் என்றும் இல்லாததோர் இன்பம் பெற்றேன். அவர் மதி நலத்தை மனமாரப் புகழ்ந்துரைத்தேன்.

"புகழ் பூத்த புதுவைத் துறையே ! சென்னையிலே பிரெஞ்சு ஆதிக்கம் பெருகக் கண்ட மகமதிய நவாப்பு பெருஞ் சீற்றமுற்றார்; முள் மரத்தை முளையிலே கிள்ளியெறிய வேண்டும் என்றெண்ணிச் சென்னையின் மீது படையெடுத்தார். நவாப்பின் மைந்தன் மாவுஸ்கானே படைத்தலைவனாயினான். இதையறிந்த டூப்ளே புதுவையிலிருந்து ஒரு பட்டாளத்தைச் சென்னைக்கு அனுப்பினார். அடையாற்றின் வடகரையில் இருபடைகளும் கை கலந்தன; கடும்போர் புரிந்தன. சிறிது நேரத்தில் மகமதியர் படை சின்னபின்னமாய்ச் சிதறி ஓடிற்று. 'மகமதியர் அதிசூரர்; அவரை வெல்ல எவராலும் ஆகாது' என்று பொதுமக்கள் எண்ணியிருந்த எண்ணம் அடையாற்றுப் போரிலே அடிபட்டு வீழ்ந்தது. மகமதியரது பேராண்மையைத் தகர்த்த டூப்ளேயின் புகழ் மும்மடங்கு வளர்ந்தது.

"நிலையற்ற பெருங்கடலே! ஆயினும், இன்பமும் துன்பமும் கலந்ததே இவ்வுலக வாழ்க்கை உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். நாட்டிலே குழப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/76&oldid=1248532" இலிருந்து மீள்விக்கப்பட்டது