பக்கம்:கடற்கரையினிலே.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கடற்கரையிலே


'கலீபா' வாக வேலை பார்த்தார். ஆயினும், இவர் மனம் தமிழகத்தையே நோக்கி நின்றது. செவிச்சுவையுடைய சீதக்காதியார் தேனினும் இனிய தமிழ்ச் சொல்லைத் கேளாமல், வடநாட்டில் வாழ முடியுமா? அறஞ் செய்ய விரும்பும் அவர் உள்ளம், ஆட்சியிலும் அரசாங்கச் சூழ்ச்சியிலும் ஈடுபட முடியுமா? வேந்தனிடம் விடை பெற்று, மீண்டும் தென்னாட்டை வந்தடைந்தார் சீதக்காதியார், தென்னாட்டு முத்துகளாலாகிய அழகிய மாலையை அவுரங்கசீப்புக்குக் கையுறையாக அனுப்பினார். சிலம் வாய்ந்த சீதக்காதியாருடைய அன்பு மாலையாக அதனை ஏற்றுக்கொண்ட அரசன் சந்தனமும் தேயிலையும் வந்தனத்துடன் வழங்கினான்.

"வள்ளல் வாழ்ந்த வளநகரே ! மகமதிய மதத்தில் சிறந்த பற்றுடையவர் சீதக்காதி; நபி நாயகத்தைப் பரவாத நாளெல்லாம் பிறவா நாளே என்று கருதுபவர். ஆயினும், பரந்த நோக்கம் உடையவர் அவர்; பசியால் வரும் வறிஞரையும், பரிசுக்கு வரும் அறிஞரையும் சாதி மதம் பாராது ஆதரிக்கும் சீலர். சைவ சமயத்தைச் சார்ந்த செந்தமிழ்க் கந்தசாமிப் புலவரும், நமசிவாயப் புலவரும், பிறரும் சீதக்காதியிடம் சிறந்த சம்மானம் பெற்றதை நான் அறிவேன். எக்குடிப் பிறப்பினும், யாவரே யாயினும் கற்றோரை யெல்லாம் தமது சுற்றமாகக் கருதிய செம்மல் சீதக்காதியார் என்பது சிறிதும் மிகையாகாது.

"சான்றோரை ஈன்ற பழம்பதியே ! நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்றறிந்து அடங்கிய பெரியார் ஒருவரை ஆன்ம நேயராகப் பெற்றார் சீதக்காதியார். இஸ்லாமிய உலகத்தில் சதக்கத்துல்லா என்னும் சான்றோரை அறியாதார் உளரோ? நபி நாயகத்தின் திருவுள்ளத்தை நன்றாக உணர்ந்தவர் அவரே ! அல்லாவின் பெருமையைத் தமிழ்நாட்டார் அனைவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/80&oldid=1248527" இலிருந்து மீள்விக்கப்பட்டது