கேட்டுக்கொண்டிருப்பான் செல்லையா. அதில்தான் அவனுக்கு அளவுகடந்த ஆவல்! இப்படித்தான் அவர்களுடைய வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது.
புரண்டு படுத்தான் செல்லையா. தூக்கம் வரவில்லை. தலையைத் தூக்கி வள்ளியைப் பார்த்தான். கவலை ஏதுமின்றி நிச்சிந்தையாக உறங்கிக்கொண்டிருந்தாள் அவள்.
அவன் மனம் பூராவும் அன்று மத்தியானம் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில்தான் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
உச்சிப் பொழுதிருக்கும். தெருக்களைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்துகொண்டிருக்கையில், வழியில் பங்களாவின் முன் ஜனக்கும்பலொன்று காணப்படுவதைப் பார்த்தான். ‘பெரிய பணக்காரங்க வீட்டுக் கண்ணாலம். ஏதாவது வசதியாகக் கிடைக்கும்’ என்று நினைத்து, நின்ற நிலையில் சிறிதுநேரம் காத்திருந்தான். அதற்குள் ‘வாங்க அண்ணே நீங்களும்’ என்ற குரல் கேட்டுத் திரும்பினான். எல்லோரும் சூழ்ந்து விட்டார்கள். நடுவில் யாரோ ஒரு பரிசாரகன் நின்று கொண்டிருந்தான். பக்கத்தில் பெரிய பாத்திரமொன்றில் சாதம் பிசைந்து வைக்கப்பட்டிருந்தது. அவரவர்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கிச் சென்றார்கள். செல்லையா முயன்று பார்த்தான்; முடியவில்லை. கம்பை ஊன்றியபடி அக்கூட்டத்திற்குள் எப்படி நுழைய முடியும்? ஆனால், மறு வினாடி தன் தோள்மீது யாரோ கைவைப்பது தெரிந்ததும் திரும்பிப் பார்த்தான்.
‘அண்ணே!’——அறிமுகமற்ற புதுக்குரல் செல்லையாவுக்கு வியப்பை அளித்தது.
‘என்ன அண்ணே. இப்படித் தெகச்சிப்போய்ப் பார்க்கிறீங்க! நீங்க இந்தச் சோத்தை வச்சிக்கிங்க. நான் போய் வேறே வாங்கிக்கிறேன். பாவம்! கம்பை ஊணிக்கிட்டு இந்தக் கும்பலில் புகுந்து எப்படிச் சோறு வாங்கமுடியும்?’
உவந்தளிப்பதை உள்ளப் பூசிப்புட்ன் ஏற்றுக்கொண்டான்.செல்லையா. கொஞ்சநேரத்தில் பலநாள் தோளுக்குத்