விழிக்கோடிகளில் மிதந்து கிடந்த கண்ணிரைத் துடைக்கக்கூட நினைவு வரவில்லை அவளுக்கு.
திடீரென்று மழை 'சோ'வென்று கொட்ட ஆரம்பித்தது.
மரத்தின்மீது சாய்ந்திருந்த தன் அண்ணனைக் கீழே படுக்க வைத்துவிட்டுத் துாற்றல் மேலே அடிக்காதிருக்கும்படி ‘தட்டி’ ஒன்றும் அணையாக வைத்தாள். ஒருதடவை செல்லையாவை உற்று நோக்கினாள். அவளுக்கு வெலவெலத்துவிட்டது. தன் உயிரைக் கொடுத்துத் தன்னை உயிருக்குயிராகக் கண்காணித்து வந்த அருமை அண்ணனுக்கு உடம்புக்கு முடியவில்லை என்பதை நினைத்துப் பார்த்த பொழுது அவளுக்கு அழுகை வந்துவிட்டது.
மெதுவாக ‘அண்ணாச்சி’ என்று கூப்பிட்டாள். அவள் குரலில் வேதனை தலைதுாக்கியிருந்தது.
தங்கையின் குரல் கேட்டதும் மெல்லக் கண்களைத் திறந்தான்.
‘தங்கச்சி, அழாதே, ஒடம்புக்கு ஒண்ணுமில்லை. சும்மா சுத்தி அலைஞ்ச அலுப்பிலே கொஞ்சம் சூடாயிருக்குது′ என்று சமாதானப்படுத்தினான்.
ஆனால், அதே சமயம் ‘தனக்கு ஏதாவது நேர்ந்திட்டால் பின்னால் தங்கச்சிபாடு——’ என்ற எண்ணம் அலைபாய்ந்தோடிய போது மட்டும் அவனுக்குக் கண்களில் நீர் பொங்கியது.
செல்லையாவின் அருகில் உட்கார்ந்திருந்த வள்ளி அவன் உடம்பைத் தொட்டுப் பார்த்தாள். தணல் மாதிரி உடம்பு கொதித்தது. என்ன செய்வதென்று தோன்றவில்லை அவளுக்கு. வைத்த கண் கொட்டாமல் அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
காற்றில் விலகியிருந்த மேல் துணியை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் செல்லையா.
திடீரென்று பிரமைபிடித்தவன் போலத் தலையை உயர்த்திக் கண்களைத் திறந்து பார்த்தான்.அப்பொழுதுதான்