பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போலீஸ் ஸ்டேஷனில் போய் ரிப்போர்ட் கொடுத்து விட்டு, இராமேசுவரத்தில் இருக்கும் அவரது நண்பருக்கும் தெரிவித்தால், அவர் மேற்கொண்டு உதவி செய்வார், என்பதுதான் அவர் கூறிய யோசனை. தருமலிங்கமும் கணக்கப் பிள்ளையின் பேச்சுக்கு மதிப்புகொடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விட்டுப் போகும்பொழுது, எதிரே வேலைக்காரன் வேம்புலி வந்தான்.

எசமான்! எசமான்!

வேம்புலி வேகமாக எதையோ சொல்வதற்கு முயற்சித்தான். ஆனால், பேச முடியவில்லை. மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் வேம்புலி?’ தருமலிங்கம் தன் மனதில் படபடப்பு இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிதானமாகக் கேட்டார். ஆனாலும், என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவல் அவர் கண்களில் அலைமோதி நின்றன.

எசமான்! நடேசனைக் கண்டு பிடிச்சிட்டேன்! வேம்புலி ஒரு முக்கியமான சேதியைச் சொல்லி, தான் ஒரு நன்றியுள்ள வேலைக்காரன் என்பதைக் காட்டிக் கொள்கின்ற பெருமையுடன் சொன்னான்.