பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94



அல்லலுறும் பாட்டாளி பொருளாதார
அடிமையினால் அரசியலில் அடிமை யாவான்;
கிள்ளுகின்ற பசியவனைச் சமுதா யத்தில்
கீழ்மகனாய் ஆக்கிவிடும்; பளிங்கு போன்ற
உள்ளத்தைப் பாழாக்கும்; உயிரின் மேலாம்
ஒழுக்கத்தைக் கெடுத்துவிடும்; முதலா ளித்வ
முள்ளிருக்கும் வரைவறுமை குத்தும்; நம்மை
மொட்டையடிக் கும்சுரண்டல் இருந்தே தீரும்.


கையலுத்து வருந்துகின்ற ஏழை மக்கள்
களைப்படைந்த தோள்களின்மேல், அழுத்துகின்ற,
தெய்வீகப் பெருஞ்சுமையே சமயம்; தங்கள்
தேவைக்குப் போராடித் தோற்ற மக்கள்
பொய்யான கடவுளையும், புராணம் கூறும்
புரட்டினையும் நம்புகின்றார்; சொர்க்க வீடு
மெய்யென்றும் இவ்வுலகில் கிட்டா இன்பம்
மேலுலகில் கிட்டுமென்றும் எண்ணு கின்றார்.


வறியவரை வறியவராய் வைத்தி ருக்க
வகைசெய்யும் ஏற்பாடே ‘தான தர்மம்!’
‘வறியவர்க்குக் கொடுப்பதனால் பணக்கா ரர்க்கு
வானுலகம் வரவேற்பு நல்கும்; இங்குப்
பொறுமையுடன் இருக்கின்ற ஏழை, வானப்
பொன்னுலகில் புத்தின்பம் பெறுவான்’ என்று
குருமார்கள் கூறுகின்றார்; பயணச் சீட்டும்
கொடுக்கின்றார்; கொழுக்கின்றார் கொள்ளையாலே!