பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கோவிலிலே வழிபாடு நடத்து கின்ற
குருக்களுக்கு மாளிகையில் என்ன வேலை?
ஆவியுடல் பொருள்யாவும் தொண்டுக் காக
அர்ப்புணிக்க வேண்டியவர், அரசாங் கத்துச்
சாவியின்மேல் கண்வைத்தால், இனிமேல் இந்தச்
சமயத்தின் கடைக்காலே தகர்ந்து போகும்.
பாவத்தை மன்னிக்கும் குருமார், தாமும்
பாவத்தைச் செய்யாமல் இருக்க வேண்டும்.


நாத்திகமே நம்கட்சி நடுந ரம்பு!
நலம்பெருக்கும் விஞ்ஞானத் துணையால், இந்த
ஆத்திகத்தின் முதுகெலும்பை முறிப்போம்; நம்மை,
அழுத்துகின்ற மதச்சுமையை, அறிஞர் நெஞ்சில்
பூத்திருக்கும் பகுத்தறிவுக் கொள்கை யாலே
புரட்டுதற்கு வழிவகுப்போம்; புரட்சிக் காரர்
சாத்திரத்தீ முன்னாலே, சமய மென்னும்
சருகென்ன செய்துவிட முடியும் இங்கே?


சிலுவையினை நம்பாத பேர்க ளுக்குச்
சிரச்சேதம் தந்தார்கள்; இறைவன் வந்து
கொலுவிருக்கும் கோவிலிலே நல்ல வர்க்குக்
கொலைத்தீர்ப்புக் கொடுத்தார்கள்; பெண்ணினத்தைப்
பலியாடு போல்நெருப்பில் எறிந்து நெஞ்சம்
பதைபதைக்கக் கொன்றார்கள்; இந்தக் கோயில்
எலியாரின் நடத்தைகளைக் கண்கா ணிக்க
இனியிங்குக் காவலரை அமர்த்த வேண்டும்.