பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


கண்ணீரை வடிக்க வேண்டாம்
காதலி என்றீர்! பாயும்
கண்ணீரே இடுக்கித் துன்பக்
கவலைக்குக் கால்வாய்; உங்கள்
எண்ணத்தை நெருப்பு மூச்சை
எழுதுங்கள் மடலில்; என்றன்
கண்ணீரில் அவையி ரண்டும்
கலக்கட்டும்; ஒன்றா கட்டும்,

அற்புதம் இந்நாள் ஏதிவ்
வகிலத்தில்? விரிந்து போன
கற்களா கூடும்? நம்மைக்
காதலா இனிமேல் கூட்டும்?
நிற்கிறேன் உமது வான்வில்
நீண்டமுக் காட்டுக் காட்டில்!
கற்பினை வற்பு றுத்தும்
கண்ணியில் வீழ்ந்து விட்டேன்!

படுக்கையின் அருகே உங்கள்
படமுண்டு. .பார்வை யாலே
கடித்தென்னை விழுங்கும் ஊமைக்
காதலன். . அப்ப டத்தைக்
கடைக்கண்ணால் பார்த்து நெஞ்சைக்
காளவாய் ஆக்கு கின்றேன்;
அடிக்கடி ஊடிக் கூடி
அரைக்காதல் நடத்து கின்றேன்.