பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107


மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. பழையகால மசூதிகள், அரண்மனைகள், கோவில்கள் முதலியவை ஒருநோக்குக் கட்டடங்களே. ஒரு பக்கம் எம்மாதிரி அமைக்கப்படுகின்றதோ, அதே போல அக்கட்டடத்தின் எதிர்ப் புறத்தையும் அமைப்பது இதன் சிறப்பியல்பாகும். வடக்கில் தாஜ்மகாலும், தெற்கில் தஞ்சைப் பெரிய கோவிலும் ஒருநோக்குக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இருபதாம் நூற்றாண்டில் இதுபோன்ற கட்டடங்களை மக்கள் விரும்புவதில்லை. இன்று பல்நோக்குக் கட்டடங்கள் (Unsymmetrical buildings) மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்படுகின்றன. இக்கட்டடங்கள் பல கோணங்களில், பலவித உருவ வேறுபாடுகளோடு அமைக்கப் படுகின்றன. ஒருநோக்குக் கட்டடங்களில் நடுவிடமே வாயிலுக்கு ஏற்றதாகக் கருதப்பட்டது. பல்நோக்குக் கட்டடங்களில் வாயிலை ஒரு மூலையில் அமைப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

பண்டைக் காலத்தில் கட்டடங்கள் செங்கல், கருங்கல், வண்ணக்கல், சலவைக்கல், சுண்ணச் சாந்து, மணல் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கட்டப்பட்டன. இந்நூற்றாண்டில் சிமெண்டு என்ற புதிய பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. சிமெண்டு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கட்டட வேலை மிகவும் எளிதாகிவிட்டது. சிமெண்டு, மணல், பொடிக் கற்கள் ஆகியவற்றை ஏற்ற அளவில் கலந்து 'காங்கிரீட்டு' செய்கிறார்கள், அதன்