பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. தஞ்சைப் பெரிய கோவில்

முற்காலச் சோழர்களில் புகழ்பெற்றவன் கரிகாற் பெருவளத்தான். பிற்காலச் சோழர்களில் புகழ்பெற்றவன் முதலாம் இராசராச சோழன், இராசராசன் தமிழக வரலாற்றில் முதலிடம் பெறத்தக்க சிறப்பு வாய்ந்தவன். இவன் வெற்றிச் சிறப்பில் சந்திரகுப்த மௌரியன், சமுத்திரகுப்தன், நெப்போலியன், அலெக்சாந்தர் போன்ற பெருவீரர்களுக்கு இணையானவன்; ஆட்சிச் சிறப்பில் மொகலாயப் பெருவேந்தனான அக்பருக்கு இணையானவன். தமிழக வேந்தர்களில், தென்னாடு முழுவதையும் வென்று ஒரு பேரரசை அமைத்த பெருமை இவனையே சாரும். கடல் கடந்து சென்று வெளிநாடுகளை வென்று, அங்கெல்லாம் தமிழர் அரசாட்சியை. நிறுவிய முதல் மன்னன் இவனே. சேரன் செங்குட்டுவன் போன்றவர்கள் கடல்கடந்து சென்று, எதிரிகளைத் தோற்கடித்தார்களே தவிர, அங்கெல்லாம் தங்கள் ஆட்சியை நிறுவவில்லை.

இரண்டாம் பராந்தகச் சோழனுக்கு, அவன் மனைவியான வானவன் மாதேவியாரிடத்திலே பிறந்த அரும்பெறற் செல்வனே முதலாம் இராசராசன். இவன் ஐப்பசித் திங்கள் சதய நாளிலே பிறந்தான். பெற்றோர்கள் இவனுக்கு இட்டு வழங்கிய பெயர் அருண்மொழி வர்மன் என்பது. சேரனையும் பாண்டியனையும் வெற்றிகொண்ட காரணத்தால். இராசராசன் என்ற பட்டப் பெயர் இவனுக்கு ஏற்பட்டது. இப்பெயரே இவன் வாழ்நாள் முழுதும் நிலைத்துவிட்டது.