பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்னும் பேரவாக் கொண்டிருந்தான்.

பெருங்கற்களினால் கோவில் கட்டும் கலை பல்லவர் காலத்திலிருந்தே தமிழகத்தில் சிறப்புற்றிருந்தது. தமிழ் நாட்டின் முக்கிய ஊர்களிலெல்லாம் சிற்பக் கலையழகு மிக்க கோவில்கள் எழுந்தன. நாடெங்கும் சிற்பிகள் வாழ்ந்தனர். அவர்களையெல்லாம் இராசராசன் தஞ்சைக்கு வரவழைத்தான். தலைமைச் சிற்பி கலைக்குப் பிறப்பிடமான காஞ்சி மாநகரத்தைச் சார்ந்தவன்.

இக் கோவிற்பணி கி. பி. 1005 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் முடிவுற்றது. தஞ்சை வயற்பாங்கான இடம். இங்கு மலைகளோ குன்றுகளோ இல்லை. இராசராசன் கட்ட விரும்பிய கோவிலோ பெரிய கோவில், பெருங்கோவில் அமைப்பதற்குப் பெரிய கருங்கற்கள் வேண்டும். ஆதலாலே கருங்கற்கள் நெடுந்தொலைவிலிருந்தே கொண்டு வரப்பட்டன. சிற்பிகள் குறிப்பிட்ட அளவிலே, கல் தச்சர்கள் பாறைகளைப் பிளந்தெடுத்தனர். யானைகள் அக்கற்களைத் தஞ்சைக்கு இழுத்து வந்தன. இக் கோவிற் பணியில் ஆயிரக் கணக்கானவர் ஈடு பட்டனர். இக்கோவில் கட்டப்பட்ட காலம், இராசராசன் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி. நாட்டில் போர் ஒழிந்து அமைதி பெற்றிருந்த காலம். எனவே இராசராசன் தன் முழு முயற்சியையும் கோவில் கட்டுவதிலேயே ஈடுபடுத்தி இருந்தான். நாடெங்கும், தஞ்சையில் உருவாகும் இப்பெருங் கோவிலைப்பற்றியே பேச்சாக இருந்தது.