பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

ஒன்று இருந்ததாம். அரண்மனை நிருவாகத்திற்கென்றே பல அதிகாரிகள் இருந்தார்களாம்.

“பாரோ மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி மாசுபெரோ என்ற தொல்பொருள் ஆராய்ச்சியறிஞர், சுவையான செய்திகள் பலவற்றைக் கூறுகிறார். எகிப்து நாட்டின் தொல்பொருள் துறைத் தலைவராக நீண்ட நாள் பணியாற்றிய அவர் கூறும் செய்திகள் பின்வருவனவாகும்:

“பாரோ மன்னர்கள் மணம் தரும் பொருள்களைப் பெரிதும் விரும்பினர். இத்துறையில் இருபது வகைத் தொழில்கள் வளர்ச்சி பெற்று இருந்தன. அரசாங்க நாவிதர்கள் என்ற பெயரால் ஒரு தனிக் கூட்டத்தாரே வாழ்ந்தனர். அவர்கள் தாம் அரச குடும்பத்தார்க்குச் சவரத் தொழில் செய்ய வேண்டும். அரசரின் தலையை அழகு செய்வதோடு பொய் முடியும் அவர்கள் தயாரித்துக் கொடுப்பர். அம் முடிகளில் ஒளிவீசும் வைரங்களை வரிசையாகப் பொருத்தி வைப்பர். நகத்தை ஒழுங்காகச் சீவிவிட்டு அதற்கு வண்ணம் தீட்டுவதற்கும், அரச குடும்பத்தினரை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்கும், கண்ணுக்கு மை செய்து பூசுவதற்கும், உதட்டுக்கும் கன்னத்திற்கும் வண்ணச் சாந்து செய்து அப்புவதற்கும் தனித்தனியே நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இருந்தனர்.

“செருப்புத் தைப்பதற்கும், அரைக்கச்சை தைப்பதற்கும் தனித்தனியே தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அரச குடும்பத்து ஆடை தைப்பதற்கென்று, தையற்காரர்களின் கூட்ட மொன்று இருந்தது. அவர்களில், பட்டாடை தைப்-