பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அறிவிக்க “மன்னிய சிவன்யாம்” என்ற தொடர் மூலம் விளக்கியருளினர்.

அடுத்தாற்போல், சேரமான் பெருமாண் நாயனார் சிறப்பையும் எடுத்தியம்ப எண்ணி, அவர்க்குரிய சிறப்புக்களுள் கொடைச் சிறப்பினையே விதந்து கூற உளங்கொண்டு “பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்கு உரிமையின், உரிமையின் உதவி” என்று வரைந்தனர். சேரர் பெருமானார், கொடைக் குணத்தில் ஒப்பாரும், மிக்காரும் இன்றித் திகழ்ந்தனர் என்பதைச் சேக்கிழார் பெருமானார் “இம்பர் உலகில், இரவலர்க்கும், வறியோர் எவர்க்கும் ஈகையினால் செம்பொன் மழையாம் எனப்பொழிந்து” என்று செப்பியதனாலும் தெள்ளிதின் உணரலாம். சேரர்மரபே பொதுவாகப் புலவர்கட்குப் பொன்னும் பொருளும் ஈந்து புகழ்பெற்றது என்பதைப் பதிற்றுப் பத்து என்னும் சங்கமருவிய நூலால் சங்கையறத் தெளிகின்ரறோமல்லமோ ? இந்த மரபின் உரிமை சேரர் மெருமானார்க்கு இருத்தல் கருதியும், நினைவுபடுத்தக் கருதியும், “உரிமையின், உரிமையின்” என்றனர். இந்த அளவில் சேரர் பெருமானாரது புகழினைப் புகழ்ந்து நிறுத்தினாரல்லர் நீல மேனி வால் இழைபாகத் தொருவர். அம் மன்னரது குடையினையும் சிறப்பிக்க எண்ணியவராய் “குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ் செருமா உகைக்கும் சேரலன் காண்க” என்றனர். இவ்வாறு, குடையினைச் சிறப்பித்ததன் நோக்கம், அக்குடை வெயிலை மறைப்பதற்கு மட்டும் உரியதன்று குடிமக்களின் துன்ப வெம்மையை மறைக்கவும் வல்லது; காக்கவும் வல்லது என்பனவற்றை அறிவிக்கவே என்க. இக் காரணங்களைப் பற்றியே மன்னர்களின் குடைகள் மாண்புற்றிலங்குகின்றன என்பதை,

“கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றே வருந்திய குடிமறைப் பதுவே”

என்ற புறநானூற்றடிகளாலும்,