3. பத்துப்பாட்டின் பண்பு
பாட்டு இன்னது என்பதைப் பலபடப் பகர்கின்றன பன் மொழிகள். பலவகைத் தாதுக்களினால் உயிர்க்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போலப் பல்வகைச் சொற்களாலும் பொருளுக்கு இடனாகத்தங்கள் அறிவினால் கற்றுவல்லோர் அலங்காரம் தோன்றச் செய்வது பாட்டு என்றும், அறிவு உலகிற்கு அழகு செய்வதாய், நிறைந்த பொருட் பொலிவு உடையதாய்த் துலங்குவது பாட்டு என்றும் செந்தமிழ் நூல்கள் செப்பிக் களிக்கின்றன. மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆகும் என்று அறைகின்றனர் ஆங்கில அறிஞர்கள், இங்ஙனம் இயம்பப் பெறும் பாட்டின் இலக்கணம் அனைத்தும் பொருந்தப்பெற்றதே பத்துப்பாட்டு என்னும் பன்னரும் புகழுடைய நூலாகும்.
உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் வரைந்த உரைகளில் இந்நூற்குரிய உரையும் ஒன்றாதலின், அதனை அச்சிட்டு வழங்கிய ஐயர் அவர்கள் தம் முகவுரையில்
“அமிழ்தினில் சிறந்த தமிழெனும் மடந்தை
கந்தரத் தணிமணிக் கலன்அர சென்ன
என்றும், தமிழ்விடு தூது என்னும் தனிப்பெரும் பனுவல்,
“மூத்தோர்கள் பாடி அருள்பத்துப் பாட்டும்,”
என்றும், உரைச் சிறப்புப்பாயிரம் உரைத்த ஆசிரியர் ஒருவர்.