பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

என்னும் திருமுருகாற்றுப் படையின் அடிகளில் இயற்கை யழகின் இயல்பு எத்துணைச் சிறப்புடன் எடுத்து இயம்பப்பெற்றிருக்கின்றது பாருங்கள்!

அழகு நிறைந்த சிறகுகளையுடைய வண்டின் கூட்டம் சேறு நிறைந்த வயலில் மலர்ந்த தாமரை மலரில் இரவு முழுவதும் உறங்கி, விடியற்காலத்தே எழுந்து நெய்தல் மலரை ஊதி மாலைப்போது கண் போன்று மலர்ந்த சுனைப்பூக்களிலேசென்று ஒலிக்கும் திருப்பரங்குன்றம் என்பதன்றோ இவ்வடிகளின் பொருள்!

“அறல்போல் கூந்தல் பிறைபோல் திரு நூதல்
கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலவுறும் முத்தில் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குழை ஊசல் பொறைசால் காதின்
நாண்அடச் சாய்த்த நலங்கிளர் எருத்தின்
ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரல்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்உகிர்
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து
நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவு நடுவின்
இரும்பிடித் தடக்கையின் செறிந்து திரள் குறங்கின்
வருந்துநாய் காவில் பெருந்தரு சீறடி

பெடைமயில் உருவில் பெருந்தகு பாடினி.

இப்பொருநர் ஆற்றுட்படை அடிகள் ஒரு பெண்ணின் எழில் உருவ ஓவியத்தை யன்றோ எழுதிக் காட்டுகின்றன. இவ்வடிகளைப் படிக்கும்தோறும் படிக்குந் தோறும் பாடினியின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் நாம் நேரில் காண்பதுபோன்று அல்லவோ இவ்வடிகள் காட்சி அளிக்கின்றன.