பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

கம்பர், சொற்பொருளின் ஆழத்தினை நன்கு சிந்திப்பதில் வல்லுநர். எளிய சொல்லாயினும் அஃது இடத்திற்கு ஏற்ப அமையப்பெறின், அஃது அரிய சொல்லே சீரிய சொல்லே-என்பது கம்பரது துணிபு. திருஞான சம்பந்தர் புராணத்தில் ஆளுடை பிள்ளையார் காளத்தியப்பரைக் கும்பிட்டதன் பயனாகக் காளத்தி வேடராம் கண்ணப்பரைக் கும்பிடு கையில் "கும்பிட்டபயன் காண்பார்போல் மெய் வேடர் பெருமானைக்கண்டு வீழ்ந்தார் எனப் பாடி உளம் பூரித்தார். ஈண்டு வீழ்ந்தார் என்னும் சொல் பாலருவாயருக்குக் கண்ணப்ப நாயனரிடத்து அமைந்த அன்பின் பெருக்கை அறிவிப்பதாய் விரைந்து பணிந்து வணங்கிய பண்பாட்டை விளக்கி நிற்கிறது. இதன் ஆழ்ந்த பொருளே அறிந்த கம்பர் தாமும் அவ் வீழ்ந்தார் என்னும் மொழியின் வேகத்தைத் தம்நூலில் பொருத்தமான இடத்தில் வைத்துப் போற்ற விழைந்து, விபீடணன் இராமனைக் கண்டு வணங்கும் போது அவனது அன்பின் மேம்பாட்டை அறிவிக்க, வரங்களின் வாரியன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் எனப்பாடி அகங்களித்துள்ளார் என்பதை அறியின், கம்பருக்குச் சேக்கிழார்பெருமானர் கவியினிடத்து எத்துணை ஈடிபாடும் அன்பும் ஆர்வமும் இருந்தன என்பதை அறிஞர்கள் பாராட்டாமல் இருக்க இயலாது.

காதால் கேட்டற்கும் சகிக்க ஒண்ணாத வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பமும் வாய்க்கப்பெறின், அவ்வார்த்தைகளின் கொடுமையினை விளக்க, தக்க உவமை கூறவேண்டுவது கவிகளது திறனே ஆகும், அந்த முறையில் சிறுத்தொண்டரிடம் வந்த வைரவர் தாம் கூறப்போகும் செய்தி கடுமையானது என்பதை முன்பே அறிவிப்பான்வேண்டி அதனைத் தக்க உவமை வாயிலாக,