37
கொண்டிருந்தது. அந்த ஜீவனின் முகத்தில் எப்பொழுதும் ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஏக்க பாவம் குடிகொண்டிருக்கும். அதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்று நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஆராய முற்படுவதுண்டு. ஆனால் நீண்ட நாட்கள் வரை அது எனக்கு விளங்காத புதிராகவே இருந்து வந்தது.
மேலும், அத்தகைய ஆராய்ச்சிகளில் இறங்குவதற்காகவா நான் அங்கு போயிருந்தேன்? தொழிலில் அனுபவம் பெறுவதற்காகவல்லவா?
பரந்தாமனார் பாரிஸ்டராயிருந்தாலும் மற்றவர்களைப் போல அவர் சட்டத்துக்கு அடிமையாகிவிடவில்லை; சட்டந்தான் அவருக்கு அடிமையாகவும், வசதி மிக்க வாழ்க்கைக்கு வழி கோலும் தொண்டனாகவும் இருந்து வந்தது. ஆகவே அவர் வெறும் சட்ட இயந்திரமாகி விடவில்லை; உயிரும் உணர்ச்சியுமுள்ள மனிதராகவே இருந்து வந்தார். சமூகப் புணருத்தாரணத்தில் அவருக்கிருந்த ஆர்வம் பிரசித்தமானது. பாரத சமுதாயத்திலுள்ள அநீதிகளையும் அக்கிரமங்களையும் பற்றி ஆவேசமாகப் பேசும்போது அவருடைய கண்களில் தீப்பொறி பறக்கும், கேட்பவர்களுக்கோ அந்தக் கணமே கையில் தீப்பந்தத்துடன் ஒடோடியும் சென்று அத்தகைய சமுதாயத்தை அடியோடு கொளுத்திச் சாம்பலாக்கி விட்டு வந்து விடுவோமா என்று தோன்றும். அதிலும் கைம்பெண்களின் துக்ககரமான வாழ்க்கையைப் பற்றி அவர் விவரிக்கும்போது, ஒரே கண்ணிர் மாரிதான்! ‘முதல் தாரத்தை இழந்த ஒவ்வொரு மடையனும் ஏன் இரண்டாந்தரமாக ஒவ்வொரு கைம்பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு சமூகத்தின் ஊழலை ஒழிக்கக் கூடாது?’ என்று உச்சஸ்தாயியில் இரைந்து கேட்கும்போது? அவர் தொண்டையிலுள்ள ஈரம் அவ்வளவும் வற்றிப்போகும். உடனே அருகிலிருப்பவர்கள் அத்தனை பேரும் ஆளுக்