பக்கம்:கண் திறக்குமா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

45


“நான் என்ன செய்வேன்? அன்றைய நிலைமை அப்படியிருந்தது...”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை; உங்கள் உபதேசம் ஊருக்கு மட்டும் என்று சொல்லுங்கள்!” என்றாள் அவள்.

இந்தச் சமயத்தில் மோட்டார் ‘ஹாரன்’ சத்தம் கேட்டது. வருவது பரந்தாமன்தான் என்று அறிந்ததும் என் உள்ளத்தில் ஏதோ ஒருவிதமான அச்சம் உதித்தது ‘வீட்டில் யாரும் இல்லாத வேளையில் இவனுக்கு இங்கே என்ன வேலை?’ என்று அவர் நினைத்துக்கொண்டு விட்டால்? - நான் மடமடவென்று மாடிப் படிகளில் ஏறினேன்; சாந்தினி கலகலவென்று சிரித்தாள்.

மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும். அதற்குப்பிறகு நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதைத் தவிர ஒருவார்த்தைகூடப் பேசி அறியோம். இந்த நிலையில்தான் அவள் என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். அன்றும் என்னுடன் பேசுவதற்கு ஆஸ்பத்திரியின் சட்ட திட்டங்கள் அவளை அனுமதிக்கவில்லை. பார்வையாளரின் நேரம் முடிந்ததும் ‘டக், டக்’ என்ற டாக்டர்களின் பூட்ஸ் ஒலியும், ‘களுக், களுக்’ என்ற நர்சுகளின் சிரிப்பொலியும் கலந்து ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. ஆகவே, “சாந்தினி, நீயா!” என்று நான் கேட்டதற்குப் பதிலாக, என்மேல் இரண்டு சொட்டுக் கண்ணீரைத்தான் அவளால் அன்று உதிர்க்க முடிந்தது!

அதற்குப் பின் மட்டும் என்ன? - அவள் வரும் போதெல்லாம் என் தாயாரும், தங்கையும் வந்து விடுவார்கள்; குறிப்பிட்ட நேரம் வரை அவர்களே என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் போன பிறகு அவள் வருவாள்; ஆவல் நிறைந்த கண்களுடன் என்னைப்பார்ப்பாள் - அதற்குள் மணி அடித்து விடும் - ஏமாற்றம், அதே ஏமாற்றம்! - திரும்பிச் சென்று விடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/48&oldid=1379082" இலிருந்து மீள்விக்கப்பட்டது