பக்கம்:கதாநாயகி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம் * 7


ஆக வேண்டுமென்ற என் கனவை விதி அழித்துவிட்ட நிலையிலே, இந்த ஒரு முடிவுக்கு நான் வருவதைத் தவிர, வேறு மார்க்கம் ஒண்ணுமே எனக்கு மட்டுப்படலே!.... ‘வாழ்ந்து காட்டுவதற்குத்தான் வாழ்க்கை!’ அப்படின்னு அழகான, உண்மையான, இயல்பான ஒரு வசனத்தை எனக்கு நாடகத்தின் தொடக்கத்திலே நிழல் தந்த நல்லவர் ஒருவர் பேசினாருங்களே, உங்களுக்கு நினைப்பிருக்குமே! அந்த மாதிரியேதான், இப்போது என் மனசும் முடிவு செஞ்சிருக்குது. வாழ்க்கை என்கிறது! வாழ்ந்து காட்டக்கூடிய ஒரு கடமை, ஒரு சந்தர்ப்பம், ஒரு பயன் என்கிறதை எனக்கு நானே செய்து காட்ட - செய்து பார்க்கப் போகிறேன்! இந்த ஒரு சோதனைக்கு நீங்கதான் புகல் தரவேணும். உங்களால்தான் எனக்கு அடைக்கலம் தரவும் இயலும். அம்மாதிரியான ஒரு பக்குவமும் பரிவும் பாசமும் கடமையும் உங்களுடைய மனத்துக்குத்தான் உண்டு!... உங்களுடைய மனிதாபிமானத்துக்குத்தான் உண்டு!...” உங்களுடைய மனிதத்தன்மைக்குத்தான் உண்டு!....”

உணர்வுகளின் செறிவு துலங்க, உணர்ச்சி வசப்பட்டு பேசினாள் ஊர்வசி. மூச்சு வாங்கியது.

அப்போதைக்கு அவள் பேச்சு முடியட்டுமென்று காத்திருந்தாற் போல, டெலிஃபோன், மறுமுறையும் கூப்பாடு போட்டது.

சலனத்தின் உச்சத்திற்குக் கொணர்ந்து நிறுத்தப்பட்ட அம்பலத்தரசன், புதிய சிகரெட் பெட்டியைப் பிரித்து ஒரு சிகரெட்டை எடுத்து கொண்டு, எடுத்த சிகரெட்டைப் பற்றவைக்க வேண்டுமென்னும் நினைவற்று, தொலைபேசியை நெருங்கினான்.

‘பூ’ அலுவலகத்தினின்றும் வந்த நினைவூட்டல் குரல் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/17&oldid=1320976" இலிருந்து மீள்விக்கப்பட்டது