பக்கம்:கதாநாயகி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கதாநாயகி


தோற்றமளித்தது. அந்நினைவு அவன் இதயத்தை என்னவோ செய்தது. வேதனை சாடியது மனத்தை. வெய்துயிர்ப்பு விளைந்தது. அலுவல் முடிந்த கையோடு ஊர்வசியின் இல்லத்துக்குச் சென்று திரும்பவேண்டுமென்றுதான் நினைத்திருந்தான் அவன். ஆனால், அறைக்கு வரவேண்டி வந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவனது உற்ற நண்பனான பூமிநாதன் இங்கு மாலையில் வருவதாகத் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தான். இச்செய்தியை அவனுக்குச் சொல்லவும் அவன் அலுவல் மனை உதவியது. காலையில் ஊர்வசியின் வீட்டில் நடந்த ராஜோபசாரத்தை நினைத்தான். அந்நினைவில் புத்துருக்கு நெய் மணத்தது. சீரகச் சம்பா இட்டிலியும் புதினாத் துகையலும் சுவை கூட்டின. அத்துடன், ஊர்வசியின் கொள்ளை அன்பும் அவன் மனத்தைக் கொள்ளை கொண்டது. மதியச் சாப்பாட்டையும் அலுவல் பார்க்கும் இடத்துக்கு அனுப்பி வைப்பதாக மன்றாடினாள் மீனாட்சி அம்மாள். ஆவணி பிறந்து அப்படிச் செய்து கொள்வதே உசிதமென்று சொல்லி விட்டான் அவன். சட்டையைக் கழற்றிப் போட்டான் அம்பலத்தரசன். சட்டைப்பையில் இருந்த ஊர்வசியின் கடிதத்தை மறந்துவிடாமல் தோல் பெட்டியின் அடியில் வைத்துவிட்டு மூடப்போன சமயத்தில், மேலே தெரிந்த புகைப்படத்தைக் கண்டான். அதை எடுத்துப் பார்க்க நினைத்தவன், அவ்வாறு செய்யாமல், அதைப் பெட்டியின் அடியில் போட்டு வைத்தான். அந்த நிழற்படத்தை காலையில் ஊர்வசி பார்க்க நேர்ந்ததையும் அவன் மறந்துவிடமாட்டான். இந்தப் படத்தை ஒரு நாளைக்கு நூறு தரமாவது பார்க்காமல் இருந்ததில்லையே அவன்?... இப்போது 'பூ' அவன் கண்களை உறுத்தியது.'வாழ்வதற்கே விமர்சனம் மிகவும் நேர்த்தியாக இருந்ததென்று அவனுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/70&oldid=1284018" இலிருந்து மீள்விக்கப்பட்டது