பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

"உலகத்தவர்களே, அயில்வேலன் கவியை, அன்பால் பிழையறக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே, நாளைக்கு வந்து விடுவானே யமன். தன்னுடைய பாசக் கயிற்றால் உங்கள் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்க வந்து விடுவானே' என்கிறார்.

5

மரண வேதனை

னிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை" என்று வள்ளுவர் பேசுகிறார். சாகிறவன் மரணசமயத்தில் எப்படித் துன்பப்படுவானோ நமக்குத் தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் பட்ட வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவஸ்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும்; கண் பிதுங்கும். மரணாவஸ்தையில் தோற்றும் அறிகுறிகளும் கழுத்தில் கயிற்றை இறுக்கி முறுக்கினால் உண்டாகும் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவையே. அந்த வேதனையைக் கண்டவர்கள் மரணத்தை உண்டாக்கும் சக்திக்கு உருவம் கொடுத்து யமன் என்று பெயர் வைத்து, அவன் கையிலும் ஒரு கயிறு இருப்பதாகச் சொல்லி, அவன் அந்தக் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான் என்று சொன்னார்கள்.

தெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் யமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள். யமன் உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும் போது, "ஏ, உயிரே, நீயாக இந்த உடம்பிலிருந்து வெளியே

97