பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ஒன்றை நினைத்தால் அது அநுகூலமாக நடப்ப தில்லை. நமக்கு அவை பகைவர்களாக இருக்கின்றன. .

ஐந்து களிறு

இந்த ஐந்து பொறிகளும் மத களிற்றுக்குச் சமானம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். உலகத்திற்குப் பொதுவாக ஒரு சிறந்த நூல் செய்த வள்ளுவரும் அப்படிச் சொல்லுகிறார்.

“உரனென்னுந் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரவென்னும் வைப்பிற்கோர் வித்து."

'மனத்திண்மை யென்னும் அங்குசத்தால் பொறிகள் ஐந்தாகிய மதயானைகளை அடக்கிக் காப்பவன், எல்லாவற்றையும்விட மேலானது என்று சொல்லப்பெறும் முத்தி நிலத்திற்சென்று முளைக்கும் வித்துப் போன்றவன்' என்பது இதற்குப் பொருள்.

விதை நெல்

ந்த உலகத்தில் சாவியாய்ப் போகும் நெல் உண்டு. பயனுள்ள நெல்லும் உண்டு. நெல்லை அறுவடை செய்தால் எல்லா நெல்லும் நல்ல நெல்லாக இருப்பதில்லை. அறுவடை செய்த நெல்லைத் தூற்றினால் பதர் தனியாகப் பறந்து போய் விழுவது தெரியும். நெல்லாக இருக்கிறவற்றிலும் எல்லா நெல்லும் விதை நெல்லாக இருப்பதில்லை. பெரும்பாலானவை சாப்பாட்டிற்கு உபயோகப்படும் நெல்லாகத்தான் இருக்கும். விதை நெல் சற்றுக் கனமாக இருக்கும். நன்றாக விளைந்து முற்றிய நெல்லையே விதையாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

விளைகின்ற நெல்லிலே எப்படிச் சாவியாய்ப் போன நெல், பதராகப் போன நெல் இருக்கிறதோ, அதேபோல மனித சாதியிலும் சாவியாய்ப் போன மனிதர்கள் இருக்கிறார்கள். தம்முடைய அருமையான வாழ்நாளை வீணாக அடிக்கிற மனிதர்கள் அவர்கள். இவர்களை மக்கள் என்று சொல்லக்கூடாது. "மக்களட் பதடியெனல்" என்று சொல்கிறார் வள்ளுவர். தான் பேசுகின்ற பேச்சினாலே தனக்கும் பயன் இல்லாமல், கேட்பவர்களுக்கும் பயன் இல்லாமல் வழவழவென்று பயனில்லாத சொற்களையே பேசுகின்றானே அவனை மனிதன் என்று சொல்லக்கூடாதாம்; பதடி என்று சொல்ல வேண்டுமாம்.

136