பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"

என்ற திருக்குறளின் உரையில் சேர்தல் என்பதற்குத் தியானித்தல் என்று பரிமேலழகர் பொருள் எழுதியிருக்கிறார்.

இறைவனுடைய தாள்கள் இரண்டு. 'உனதாள்' என்பதற்கு 'உன்னுடைய தாள்கள்' என்று பொருள். உன என்பதில் உள்ள அகரம், பின்வருவது பன்மைச் சொல் என்பதைக் குறிக்கும். உனது தலை என்று சொல்லலாம். அது ஒருமை. உனதாள் என்பதில் உள்ள தாள் பாதங்கள் என்ற பொருளில் வந்த பன்மை. ஆறாம் வேற்றுமையில், வரும்சொல் ஒருமையாக இருந்தால் 'அது' என்னும் உருபும், பன்மையாக இருந்தால் 'அ' என்னும் உருபும் வரும் என்று இலக்கணம் விதிக்கிறது. அப்படி வந்தது இந்த அகரம்.

"என் உடம்பாகிய வீட்டில் மெய், வாய், விழி, மூக்கு, செவி என்னும் பொறிகளாகிய ஐந்து பாதகர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் உன்னைப் பற்றியவற்றை எண்ணலாம் என்றால் விட மாட்டேன் என்கிறார்கள். உன்னை உன்ன வேண்டுமென்றால் உன்ன விடமாட்டேன் என்கிறார்கள். மலரிட்டு உன் தாளைத் தியானம் பண்ணலாம் என்றால் அதற்கும் விடமாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வேன்? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!" என்று முறையிடுகிறார் அருணகிரிநாதர்.

செய்வதென் யான்?

"யான் செய்வது என்?" என்று கேட்கிறார்.

ஒரு வீடு வேண்டுமென்றால் வாடகை அதிகாரிக்கு விண்ணப்பம் போடுகிறோம். அவர் நம்முடைய சம்பளம், உத்தியோகம், வாடகை கொடுக்கும் சக்தி இவற்றை எல்லாம் கவனித்து, "இந்த வீட்டுக்குப் போ" என்று சொல்லுகிறார். அதைப் போலவே, இறைவன் நமக்கு, நாம் செய்திருக்கிற வினைகளைக் கணக்கு எடுத்துக் கொண்டு ஒரு வீட்டைக் காட்டி இதற்குப் போ என்று அனுப்புகிறான். இந்த வீட்டில் இவ்வளவு நாள் குடியிருக்கலாம், இதில் இன்ன இன்ன காரியங்களைச் செய்யலாம் என்று வரையறை செய்து சீட்டு எழுதித் தலையிலே ஒட்டி அனுப்பி விடுகிறான். இதைத்தான் தலையெழுத்து என்று சொல்லு

151