பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

மயானத்தைப் பற்றி வருணிக்கும் இடங்களில் பேய்களைப் பற்றிய வருணனையும் வரும். காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்களில் பேய்களின் வருணனைகள் வருகின்றன.

எல்லாப் பேய்களுக்கும் உணவு தர மயானம் போதாது. அதை மாத்திரம் நம்பியிருந்தால் பெரும்பாலானவை பட்டினி கிடக்கத் தான் வேண்டும். வேறு எதையும் சாப்பிடவும் முடியாது. ஆகவே, "ஐயோ பசிக்கிறதே பட்டினி கிடக்கிறோமே! எங்களுக்குச் சோறு கொடு!" என்று அவை யாவும் காளிதேவியைச் சுற்றி நின்று கூக்குரல் போடுமாம். அப்போது எங்கேயாவது போர் நடந்தால் உடனே செய்தி தந்தியாகப் பறந்து வரும். ஒரு பேய் அதைத் தெரிந்து கொண்டு வந்து சொல்லும். யாவும் உடனே கூட்டமாக ஒடிப் போய் யுத்தகளத்திலே மலைமலையாகக் குவிந்து கிடக்கும் பிணங்களைச் சுற்றி நின்று மகிழ்ச்சி ஆர வாரத்தோடு அவற்றை உண்டு களிக்கும். இவ்வாறு சொல்வது கவி மரபு.

தொல்காப்பியத்தில் களவேள்வி என்ற துறை ஒன்று வருகிறது. போர்க்களத்தில் இறந்த பகைவர்களுடைய உடம்புகளை பேய்கள் நுகரும்படி வீரம் விளைப்பதைச் சொல்வது அரிது.

திருமுருகாற்றுப்படையில்

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பேய்களைப் பற்றிச் சொல்கிறார். முதலில் அழகிய அணங்குகளைப் பற்றிச் சொல்லி விட்டுத் தொடர்ந்து அஞ்சத்தக்க உருவத்தையுடைய பேயைப் பற்றிச் சொல்கிறார். இப்படிச் சொல்வது ஓர் அழகு. சிவப்பையும் கறுப்பையும் அருகருகே வைத்துக் காட்டுவது போன்ற அழகு இது.

முருகன் காந்தட் கண்ணியை அணிபவன் என்று சொல்ல வந்தவர், அம் மலர் வளரும் மலைச் சாரல் சோலையை வர்ணிக்கிறார். சோலை முழுவதும் மணம் நிறைந்த பலபல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதைப் பார்த்தாலே பெண்களுக்கு எத்தனை ஆனந்தம்! 'பூ..... ... பூ.....!' என்று தெருவிலே விற்றுக் கொண்டுபோனால், அந்தப் பூவை வாங்காவிட்டாலும், கூப்பிட்டு அதன் அழகையும் மணத்தையும் சுவைப்பதற்காகவாவது, விலை கேட்கத் தோன்றும் நமது தமிழ்நாட்டுப்

222