பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

"என் நாயகன் அன்பு மிக உயர்ந்தது. உயர்ந்தது மாத்திரம் அன்று; இனியது. இனியது மாத்திரம் அன்று, தூயது, கிடைத்தற்கு அரியது" என்று சொல்ல வருகிறாள். இவை எல்லாவற்றையும் அந்த உவமையைச் சொல்வதன் வாயிலாகப் புலப்படுத்துகிறாள்.

கீழேயுள்ள தண்ணிய பொய்கையில் தாமரை மலர் மலர்ந்திருக்கிறது. வண்டுகள் அதிலேயுள்ள தேனை எடுத்துச் சென்று மலை உச்சியின் மேலுள்ள சந்தன மரத்தின் கொம்பில் வைக்கின்றன. அது தாமரைத் தேன், தாமரையிலே அது இருக்குமானால், குளத்தில் இறங்கிக் குளிக்கிற எருமை மாடுகள் அந்த மலர், அதன் தேன் எல்லாவற்றையும் வீணாக அடித்திருக்கும். ஆனால் அந்த இனிமையான தேனை வண்டுகள் எடுத்துப் போய்விட்டன. எளிதில் பிறருக்குக் கிடைப்பதற்கரிய மலையின் உச்சிக்கு எடுத்துப் போய் உயர்ந்து வளர்ந்திருக்கும் சந்தன மரத்தில் கட்டிய அடையில் வைத்திருக்கின்றன. அந்தத் தேனைப் போல இனிய, உயர்ந்த, அரிய அன்பு என்னுடைய நாயகன் அன்பு" என்று அந்தத் தலைவி பேசுகின்றாள். மலையின் உச்சியில் உள்ள சந்தன மரத்தேன் மிகச் சிறந்தது என்பதை அந்தப் பாட்டினால் அறியலாம்.

ஆனந்தத் தேன்

பூமியில் இருப்பவர்களுக்கு, மிகவும் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களுக்கு, அந்தத் தேன் இருப்பது எப்படித் தெரியும்? மலையில் ஏறி உச்சிக்குப் போனால் தெரியும் முதலில் மெல்ல மெல்ல ஏறினால் இதுவரையிலும் பார்க்க முடியாதிருந்த பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றும். பார்வைக்குத் தடையாக இருந்த பொருள்கள் கீழே போய்விடும். மலையின் உச்சியை அடைந்துவிட்டால் அங்கே வளர்ந்திருக்கும் சந்தன மரம் தெரியும். அதன் கிளையிலே கட்டியுள்ள தேன் அடை தெரியும். அந்தத் தேனைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்!

அத்தகைய சுவையான அரிய தேன் தமக்குக் கிடைத்ததாக அருணகிரியார் சொல்கின்றார். அதை ஆனந்தத் தேன் என்கிறார். அவருக்கு அந்தத் தேன் எப்படிக் கிடைத்தது? "முகம் ஆறுடைத் தேசிகன் அதை நுகர எனக்கு வழிகாட்டினான். அவன் முதலில் காட்டிய அருள் ஒளியினால் என்னைச் சுற்றி நின்ற இருள்

252