பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பதிலாக இவர்களுடைய அன்புக்கு உரியவரான ஒருவரைப் பார்த்தாலே போதுமே அது உங்களுக்கு தெரியாதா? இதோ இருக்கிறானே, முத்துக்குமாரசுவாமி. இவன் வைத்தீசுவரப் பெருமானுக்கும் தையல் நாயகிக்கும் அருமருந்து போன்றவன்; அமிருதம் போல இருக்கிறவன். இவனைத் தரிசித்துக் கொள்ளலாம்” என்று சொல்கிறார். அந்த மூன்று பேரும் அதைக் கேட்டு உடனே அந்தக் குழந்தையைப் பார்க்கப் போகிறார்கள். "குழந்தையிடத்தில் போவதானால் அதிகச் சிரமம் இல்லை. கொஞ்சம் வாழைப்பழம், தேங்காய் முதலியவற்றை வாங்கிக் கொண்டு போய்விட்டால் அவன் தரிசனம் எளிதில் கிடைத்து விடும்" என்று எண்ணி அவர்கள் முருகன் கோயிலுக்குப் போகிறார்கள். அங்கும் காத்துக்கிடக்கும்படி ஆகிவிட்டது. அவன் எங்கே போனான்? தினைக் கொல்லையைக் காவல்புரிகின்ற வள்ளியைத் தேடி ஓடி வருகிறான். "அவள் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாளா? அதைக் கேட்க மாட்டோமா?" என்று ஏங்கி நிற்கிறான். அவள் வாயிலிருந்து எப்பொழுது வார்த்தை உதிரும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய தேனூறு கிளவிக்கு வாயூறி நிற்கிறானாம்.

"மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி
வில்லியார் இளவலோடும்
விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை
வெள்ளமென வீற்றிருக்கும்
ஆனே றுயர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும்
அருமருந் தாகிநின்ற

மீன்கள் ஏறுகின்ற ஆழமான கடலை எரிக்கு உணவாக்கிய வில்லையுடைய ராமர்தம் தம்பியோடு விதிமுறைப்படியே வணங்கச் சடாயுபுரியாகிய புள்ளிருக்கு வேளுரில் கருணைக் கடலைப்போல் எழுந்தருளியிருப்பவனாகிய இடபக் கொடியைப் பிடிக்கும் கடவுளுக்கும் அம்பிகைக்கும் அரிய அமுதத்தைப் போன்றுள்ள ஆதித் தலைவன் என்று மூன்று மூர்த்திகளும் உன்னை அணுகித் திருவடித் தொண்டு செய்ய, வளைவையுடைய பிறையைப் போன்ற நெற்றியையும், தெய்வத் தன்மையையும் உடைய குறப் பெண்ணாகிய வள்ளியின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து அருகிலே சென்று, "உன்னுடைய சிறிய ஏவல்களைச் செய்ய கடைக்கண்ணால் உத்தரவு செய்" என்று குறையிரந்து அவளுடைய கோவை போன்ற வாயிலிருந்து வரும் தேன் ஊறுகின்ற இன்மொழிகளுக்காக வாயூறி ஏங்கிக் கிடந்தவனே, செங்கீரை ஆடுக, செத்துப் போய் மீண்டும் பிறக்கின்ற தெய்வங்களுக்குத் தலைவனே, செங்கீரை ஆடியருள்வாயாக.