பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேவற் பதாகை

யிலைப் பற்றிப் போன பாடலிலே சொன்னபோது "வெற்றி வேலோன் வாகனம்" என்றார். இங்கேயும் அந்த வேலை முதலில் எண்ணி, 'படைபட்ட வேலவன்' என்றார். படைபட்ட வேலவன் - படையாக அமைந்த வேலையுடைய முருகன். அவனிடம் வந்த கொடி சேவல். பதாகை என்பது கொடி. வாகை என்பது ஒரு மலர். அது வெற்றி அடைந்தவர்கள் சூடுகிற பூ போருக்குக் கிளம்பும்போது ஒரு மலர், போர் நிகழும்போது ஒரு மலர், வெற்றி அடைந்தால் ஒரு மலர் எனச் சூடுவது மரபு. வெற்றி பெற்றவர்கள் வாகை மலர் சூடுவது வழக்கம். மலரைச் சூட்டிக் கொண்டாலும், சூட்டிக்கொள்ள விட்டாலும் வாகை சூடினான் என்றாலே வெற்றி அடைந்தான் என்று பொருள்படும். வாகைப் பதாகை - வெற்றியையுடைய கொடி. கோழிக் கொடி முருகன் வெற்றியை உடையவன் என்பதற்கு அடையாளமாக இருப்பது மாத்திரம் அன்று. பக்தர்களுக்கு எப்போதும் வெற்றியை உண்டாக்கும் இயல்பையும் உடையது.

வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் ஆதலால் எல்லோரும் அவனை வேலவன், வேலாயுதன், வெற்றிவேற் பெருமான் என்று பலவகையாக அழைக்கிறார்கள். உலகில் போர் நிகழும் காலத்தில் தான் அவன் கையில் வேல் பிடிக்கிறான் என்பது அல்ல. மக்கள் உள்ளத்தில் நாள்தோறும் போர் நடந்து கொண்டிருக்கிறது. சத்துவ குணத்துக்கும், தாமச குணத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சத்துவ குணம் வெற்றிபெற வேண்டி ஞான சக்தியாகிய வேலை அவன் திருக்கரத்தில் வைத்திருக்கிறான். அதைப் போலவே வாகைப் பதாகையும் அவன் திருக்கரத்தில் உள்ளது. ஆன்மாக்கள் தூங்கித் தூங்கி விழிப்பது போல, இறந்து பிறந்து அல்லலுற்று அறியாமையில் சிக்கி இருப்பதைக் கண்டு, அவர்களுக்கு ஞான ஒளிபரப்ப முருகன் வருவான் என்ற நம்பிக்கையை ஊட்ட அது கூவுகிறது. அறியாமை இருளில் தூங்கிக் கிடக்கிற அவர்களை எழுப்புவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு கூவுகிறது.

தடையற்ற சேவல்

டைப்பட்ட சேவல் என்பதற்குத் தடை உண்டாகிய சேவல் என்று பொருள் கொள்வது சரியன்று. இறைவன் கரத்தில் ஏறுவதற்கு முன்னால்தான் அந்தச் சேவல் தடையிற்பட்டு இருந்தது.

335