பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடதட கும்பக் களிறு

தன்னைத்தானே சோதித்துக் கொள்வதும், தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதும் உயர்ந்த குணங்கள். மகாத்மா காந்தி அவர்கள் தம்முடைய சரித்திரத்தை எழுதினார். அதற்குச் சத்திய சோதனை" என்று பெயர் கொடுத்தார். சத்தியத்தை அவர் சோதித்தார் என்றோ, சத்தியம் அவரைச் சோதனை பண்ணியது என்றோ கொள்ளலாம். அந்தச் சோதனையில் அவர் வென்றார். தம்மைத்தாமே சோதித்துக் கொண்டவர் அவர் தம்மைத்தாமே சோதித்துக் கொள்பவர்கள், ஆத்ம சோதனை பண்ணுகிறவர்கள், பிறரிடத்தில் தோல்வி உறமாட்டார்கள். நமக்கு நாமே வைத்துக் கொள்ளுகிற பரீட்சையில் நாம் தோல்வியுற்றால் அவமானம் உண்டாகாது. இன்னும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மாத்திரம் தெரிந்து கொண்டு முன்னேறுகிறோம். பிறர் வைக்கும் பரீட்சையில் தோல்வியுற்றாலோ அவமானம் உண்டாகிறது.

தம்மைத் தாம் சோதித்துக் கொள்வது மகான்களுடைய குணம். ஆண்டவனுடைய சந்நிதானத்திலே குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால் மகான்களுடைய குணத்தில் எள்ளளவாவது நம்மிடம் படியும். தன்னைத் தானே சோதித்துக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு அது தொடக்கமாக நிற்கும்.
   "ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
   தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"
என்கிறார் வள்ளுவர்.

நமக்கு இரண்டு விதமாக பார்வைகள் இருக்கின்றன. குற்றத்தைப் பார்க்கும் பார்வை, குணத்தைப் பார்க்கும் பார்வை என்று இருவகை. அந்த இரண்டையும் எப்படிப் பார்க்கிறோம்? அதில் உள்ள வேறுபாட்டினால் நம் பண்பின் உயர்வும் தாழ்வும் அமைகின்றன.

நாம் எதையும் பெரிதாகவே பார்க்கிறோம். பெரியவர்களும் அப்படித்தான் பார்க்கிறார்கள். நாம் பிறருடைய சிறிய குற்றத்தைப் பெரிதாகப் பார்க்கிறோம்; நம்முடைய சிறிய குணத்தையும் பெரிதாகப் பார்க்கிறோம். பெரியவர்களோ பிறருடைய சிறிய குணத்தைப் பெரிதாகப் பார்க்கிறார்கள்; தம்முடைய சிறிய குற்றத்தைப் பெரிதாகப் பார்க்கிறார்கள். இரண்டு பேருக்கும்

43