முகவுரை
"வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி
வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்"
என்று வசதியில்லாதவர்களும் அறம் செய்யும் முறையைச் சொல்லித் தருகிறார்.
பொருளைப் பிறருக்கு ஈவதுதான் அதனை ஈட்டுவதற்குப் பயன். ஈயாமல் ஈட்டித் தொகுக்கும் பொருளாலே இம்மையிலும் பயன் இல்லை; மறுமையிலும் பயன் இல்லை.
- "வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின்
- வெறுநிழல் போல்
- கையில் பொருளும் உதவாது காணும்
- கடைவழிக்கே"
என்றும்,
- "உங்கள் வல்வினை நோய்
- ஊழிற் பெருவலி உண்ணவொட்
- டாது உங்கள் அத்தம் எல்லாம்
- ஆழப் புதைத்துவைத் தால்வரு,
- மோதும் அடிப்பிறகே'
என்றும் பாடுவது காண்க.
உலகில் நன்றாக வாழவேண்டுமானால் முருகனைப் பணிந்து அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்மறைமுகமாகக் குறிப்பிக்கிறார்.
- "கோழிக் கொடியன் அடி பணி
- யாமல் குவலயத்தே
- வாழக் கருதும் மதியிலிகாள்!"
அமைதியுடைய வாழ்வே வாழ்வாகையால், அமைதியைத் தரும் இறையன்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நன்றாக வாழ்வதாக எண்ணுகின்ற வாழ்க்கை வெறும் போலி வாழ்க்கை; இறுதியில் சாவிலே முடியும் வாழ்க்கை, வளர்த்த ஆசைகளையும் வளர்த்த உறவுகளையும் வளர்த்த தாபனங்களின் மேல் உள்ள பற்றையும் வளர்த்த உடம்பையும் சுடுகாட்டிலே பொசுக்கிவிடும் வாழ்க்கை.
5