சொல்லொணா ஆனந்தம் அருணகிரியார் பாடும் பாடல்களில் பலவகை அமைப்பைப் பார்க்கலாம். பொதுவகையில் எம்பெருமான் திருமேனி அழகை யும் அவனது அருள் திறத்தையும் எடுத்துச் சொல்வது உண்டு. உலகத்தாருக்கு உபதேசம் செய்யும் வகையிலே சில பாடல் களைப் பாடியிருக்கிறார். உலகத்தார் படுகின்ற துன்பங்களைத் தாம் படுவதாகச் சொல்லும் பாடல்களும் உண்டு. இவையாவும் அருணகிரியாருடைய விரிவான அறிவையும் கருணையையும் காட்டுகிறது. இத்தகையவற்றை மற்றவர்களும் பாடலாம். ஆனால் அருணகிரியாருடைய சிறப்பை நன்றாக வெளிப்படுத்தும் பாடல்கள் வேறு சில உண்டு. அத்தகைய பாடல்களை மற்றவர் கள் பாடுவது அரிது. அவைதாம் அவர் தம் அநுபவத்தைச் சொல்லும் பாடல்கள். அந்தப் பாடல்களைப் படித்தால் அருண கிரிப் பெருமுனிவர் முருகனது திருவருளைப் பெற்றுச் சிறந்த அநுபவம் அடைந்தவர் என்ற உண்மை புலனாகும். அனுபவ வெளியீடு அத்தகைய அநுபவத்தைப் பெற்றவர்கள் பலர் இருக்கலாம். அவற்றைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆசை உடையவர்களும் இருக்கலாம். ஆனால் சொன்னவர்கள் மிக அரியர். அருணகிரி முனிவர் அத்தகைய பெரிய உபகாரத்தைச் செய்தவர். அதனால்தான், "ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர் சொல் விளம்பினர்யார்?" என்று தாயுமான சுவாமிகள் வியந்து பாராட்டினார். அருணகிரிப் பெருமானுக்கு இறைவனுடைய திருவருளால் அருள் அநுபவம் கிடைத்தது; இந்த உடம்பில் இருக்கும்போதே கிடைத்தது. அதனைச் சொல்வதற்குரிய பக்குவம் அவரிடம்
பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/203
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை