பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“நீங்கள் புதிதாக எதுவும் எழுதவில்லையா?”
என்கிறாய்.

நான் எதை எழுதுவது?

ஒரு காலத்தில்
என் எழுத்தில் சுடர்விட்ட அழகை
எண்ணிஎண்ணிப் பெருமிதங் கொண்டதுண்டு.
இன்றோ, எதை எழுதினாலும்
சிறுமைக்கு ஆளாக நேரும்
என்ற அச்சம் பிறக்கிறது.

காரணம்.. எதை எழுதினாலும்
உன்னைப் பார்த்து எழுதியதைப் போன்ற-
படி எடுத்ததைப் போன்ற
உணர்வே தோன்றுகிறது.

இப்படித் திருடி எழுதுவது சரியா?

அப்படி எழுதுவதென்றாலும்
அசல் இருக்கும்போது எதற்காக நகல்
என்று என்னுள் கேள்வி எழுகிறது:

பிறகு எப்படி எழுதுவது?

 

44

65