பக்கம்:கனிச்சாறு 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  73


48  தமிழே எனக்கு இறைவன்!

தமிழே எனக்கிங் குயிர்மலர்ச்சி - செந்
தமிழே எனக்கிங் குடலம்!
தமிழே எனக்கிங் குள்ளுணர்வு - பைந்
தமிழே எனக்கிங் குலகம்!

தமிழே எனக்குக் கருத்தெழுச்சி! - தீந்
தமிழே எனக்குப் பார்வை!
தமிழே எனக்குச் செவியோசை! - நற்
றமிழே எனக்குப் பிறவி!

தமிழே எனக்கு முழுமுதல் தாய்! - முத்
தமிழே எனக்குத் தந்தை!
தமிழே எனக்குக் குரு, கல்வி! - நந்
தமிழே எனக்குக் காட்சி!

தமிழே எனக்கிங் குயிர்த்துணைவி! - இன்
தமிழே எனக்குக் குடும்பம்!
தமிழே எனக்கிங் குயிரின்பம்! - வண்
தமிழே எனக்குக் குழவி!

தமிழே எனக்கிங் குறவுரிமை - வன்
தமிழே எனக்குச் சுற்றம்!
தமிழே எனக்கிங் குயர்வாழ்க்கை! - அந்
தமிழே எனக்குத் தொண்டு!

தமிழே எனக்கோர் எழுத்துறவு! - இயற்
றமிழே எனக்குப் பேச்சு!
தமிழே எனக்கோர் அறிவியக்கம்! - இசைத்
தமிழே எனக்குயிர் மூச்சு!

தமிழே எனக்கிங் குயிர்நட்பு! - நடத்
தமிழே எனக்கு விருந்து!
தமிழே எனக்கு வினையாடல் - உயிர்த்
தமிழே எனக்கு நனவு!

தமிழே எனக்குத் திருமறை நூல் - பழந்
தமிழே எனக்குக் கனவு!
தமிழே எனக்கு மத மெய்ம்மம்! - அருந்
தமிழே எனக்கிங் கிறைவன்!

-1978
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/100&oldid=1419322" இலிருந்து மீள்விக்கப்பட்டது