பக்கம்:கனிச்சாறு 1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 கனிச்சாறு – முதல் தொகுதி

பொய்யாம் வினைகளை மெய்யே என்பர்;
செய்யாப் பணிக்குச் சீர்சிறப் பென்பார்!
கேடுகள் புரிவோர் கேண்மைக் குரியோர்;
பீடுறச் செய்வோர் பிடிபடத் தக்கவர்!
பூரியர் சிறையுட் புகுதலோ அக்கால்!
சீரியர் இக்கால் சிறைவாழ் குநரே!

இந்நாள் உண்மை இயம்பலே குற்றம்!
மண்ணாள் அரசின் மந்திரக் கூற்றிது! 40
வாய்மொழிக் குரிமை வழங்கினோம் என்பார்;
தாய்மொழி பேணுதல் தவறெனக் கடிவார்
நாட்டுப் பற்று நாட்டுக என்பார்;
நாட்டுப் பற்றால் நல்லவை நவின்றால்,
கேட்டுக் கொள்ளார்; கேடவை என்றே
வேட்டுக் குழற்கே விருந்துநீ என்பார்!
அறமெனக் கூறின் அதன்வரு மானத்
திறமென் னென்று சாற்றக் கேட்பார்.
பொருளெனப் புகல்வது பொன்னே என்பார்;
மருள் தவிர் இன்பம் மனையோள் செய்யும்
நெய்யொழு கடிசில் முப்புடை முங்கி
மெய்பெறக் கிடந்து துயில்வதே என்பார்!
வீடென விளம்பின் விசும்பு தடவிய
மாடருங் கட்டிட மலையே என்பார்!

இறைப்பற் றென்பதோ எருவெண் ணீற்றை
உறைப்பப் பூசி உருள்மணி மாலை
பொன்னில் தோய்த்துப் பூண்ட மேனியாப்
பின்னிய காலொடு பிரான்பிரான் என்றலும்,
பொய்முதல் வைத்துப் புனைசுருட் டூதியப்
பைமுதல் கொண்டு பன்னூ றாயிரங் 60
கோவிலில் விழுந்து கும்பிட் டெழுந்தே
ஆவின் பால்நெய் அடிசில் உண்ணலும்,
மிச்சிலை இரவோர் மிசைந்திடத் தரலும்
பச்சிலை நீறு பெறலுமே என்பார்!

மெய்ப்பொருள் தேரார்; மேனி வளர்ப்பதும்
பொய்ப்பொருள் நாட்டமும் போலிப் புகழ்ச்சியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/127&oldid=1419233" இலிருந்து மீள்விக்கப்பட்டது