பக்கம்:கனிச்சாறு 1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 கனிச்சாறு – முதல் தொகுதி

உய்யுமா நாடு? பொதுமை ஓங்குமா?
மெய்பிழைத் திடுமா? மேன்மை பெறுவமா? 100
காய்களை உருட்டுங் கவறாட் டம்போல்
ஏய்த்துப் பிழைப்பதே அரசியல் என்னின்
மக்களின் விலங்கே மாண்பு பெற்றதாம்!
ஒக்கநா கரிகம் உயரச் சிறந்ததாம்!

இப்படிக் கேட்டால் - எழுதினால் பிழையெனில்
எப்படி இதனை மக்கட் குரைப்பது?
செப்படிக் கூத்தரின் தில்லு மல்லுகள்,
முப்படிப் பொய்கள் முரண்படு பேச்சுகள்
யாவும் பொறுத்திட மக்கள் யாவரும்
மாவும் புட்களும் என்றா மதித்தனர்? 110
உணர்வுடை நெஞ்சம் ஒன்றுபோ தாதா?
இனநலங் கருதுவார் இறந்தா போயினர்?
மக்கள் அரசெனில் கருத்தை மறைக்குமா?
சிக்கல் தெளிவுறச் செப்பலும் பிழையோ?
ஒப்பிலாக் கருத்தை ஒருவன் உரைத்தால்
தப்பெனக் காட்டுதல் அன்றோ தக்கது?
ஏற்ற கருத்தெனில் மக்களேற் கட்டும்!
மாற்றம் கண்டிடில் மறுத்துரை தரட்டும்!

கருத்தடை செய்யுங் கணக்கீட் டாளர்
கருத்தையுந் தடைசெயக் கருதுதல் தக்கதோ? 120
துலக்கிடுங் கருத்தினால் மக்களைத் தூண்டினால்
விலக்குவார் அதனை விளக்கி காட்டி
எழுந்தோர் தமக்கே இணக்கம் கூறி
அழுந்த அமர்த்திடல் அன்றோ நல்லறம்!
இத்திற மற்றார் எடுபிடி என்றே
கத்தியைத் தூக்கித் கழுத்தைத் துணிப்பதால்
மக்கள் உணர்வை மாய்க்க வியலுமா?
தக்கன என்றும் தழைப்பதே இயற்கை!

இந்திய நாட்டை இணைத்திட வேண்டி
இந்தியைத் திணித்தல் அறமிலை என்று 130
கூறுதல் பிழையோ? கூற்றினை அடக்கிடச்
சீறுதல் மட்டும் செய்தகு செயலோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/129&oldid=1419236" இலிருந்து மீள்விக்கப்பட்டது