பக்கம்:கனிச்சாறு 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

க௯

40.தமிழ்மொழியைப் பேணாதான் தமிழினத்தைப் பேணாதான். அத்தகையவன் எழுத்தை, வினைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது.
41. 'எப்படியேனும் இத் தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும். என் மூச்சு அதற்கு உதவிடல் வேண்டும்' என்னும் ஆவலைத் தெரிவிக்கிறது இந்தப் பாட்டு.
42.“தமிழை வளர்க்க; தமிழ்மொழியால் ஒன்றுபடுக; தமிழைத் தாழ்த்துகின்ற அனைத்து நிலைகளையும் தவிடு பொடியாக்கிடுக” என்று தமிழ் முழக்கம் கேட்கிறது இப் பாட்டில்.
43.எழுத்தாளர்கள், பொய் இலக்கியங்களும் போலிக் கதைகளும் இனி எழுதாமல். மெய் இலக்கியங்களையே துணிந்து உருவாக்க வேண்டும் என்பது.
44. 1975 அரசியல் நெருக்கடிநிலைக் காலத்தில் பாவலரேறு நடத்தி வந்த தென்மொழி இதழை அரசு தடைசெய்திருப்பதாகச் செய்தி வந்தது. அக்கால் ஐயாவின் இன்னோர் இதழும் சிறுவர்க்குரியதுமான தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தென்மொழிக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார். அக்கால் எழுதிய பாடல் இது. இதில், தமிழ் மொழிக்கென்று பாவலரேறு உழைக்க முற்படுகையில் அழிவையும், துயரையும், துன்பத்தையும். இன்பத்தையும். புன்மொழிகளையும் பொருட்படுத்த மாட்டேன் என்று உரைத்த சூளுரையைக் கேட்கலாம்.
45. 1975இல் சென்னையில் தென்மொழிச் சார்பில் தமிழக விடுதலை மாநாடு நடத்தத் திட்டமிடப் பெற்றுச் செய்தியும் அறிவிக்கப் பெற்றது. மாநாடு நடைபெறவிருந்த நாளுக்கு முந்திய நாளே அரசு மாநாட்டை நடத்தவிருந்த ஐயாவையும் செயற் குழுவினரையும் மாநாட்டில் பங்குகொள்ள வந்திருந்த சிலரையுமாக இருபத்திரண்டு பேரைத் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ்ச் சிறைப்படுத்திச் சென்னைச் சிறையில் இரண்டு மாதங்கள் வைத்திருந்தது. அக்கால் உடன் சிறையிருந்த அன்பர்கள் இரவு வேளையில் தூங்கப் போகுமுன் தம் கொள்கை விளக்கப் பாடல்களை உரக்கப் பாடி உணர்வை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். தங்களுக்குத் தெரிந்துள்ள பாடல்களையே நாளும் பாடி அவர்களுக்குச் சலித்துவிட்டது. அதன்பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாவலரேறு அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்பாடலை எழுதிக் கொடுத்தார்கள். அப் பாடல்களில் இதுவும் ஒன்று. தமிழ், வடமொழியாகிய சமற்கிருதத்தினும் உயர்ந்தது என்னும் பொருளைத் தருவது இது.
46. தமிழறிவில்லாதாரைத் தமிழறிஞர் என்று போற்றும் போலிமையைக் கண்டித்தது.
47. தூயதமிழைப் போற்றாதவர் நூல் எழுதுவதும், உரையாற்றுவதும், தமிழகத்தின் ஆட்சியில் தலைமை தாங்குவதும் கேடு செய்யுமன்றோ? அந்தக் கீழ்மையைக் கடிவது இது.
48.தமிழே உயிர், உடலம், உணர்வு, உலகம். கருத்து, பார்வை, ஓசை, பிறவி, தாய், தந்தை, குரு, கல்வி, காட்சி, துணைவி. குடும்பம். இன்பம், குழவி. உறவு. சுற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/20&oldid=1419409" இலிருந்து மீள்விக்கப்பட்டது