பக்கம்:கனிச்சாறு 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 கனிச்சாறு – முதல் தொகுதி



12  முன்னே தமிழ்...!


கற்றைக் குழலும் கருங்குவளைப் பூவிழியும்
ஒற்றைத் திருநுதலும் ஒல்கிடையும் காட்டிடினும்
அற்றைத் தமிழ்த்தாய் அருந்துயரம் நீக்காமல்
மற்றைக் கிசையேன் மனம்!

அள்ளுங் கொடியுடலும் ஆர்க்கும் எழில்மார்பும்
வள்ளைத் திருக்காதும், வாயழகும் காட்டிடினும்
கள்ளத் தயர்ந்த கனித்தமிழை மீட்காமல்
உள்ளத் திருத்தேன் உனை!

முத்து நகையும், முழுமை நிலாமுகமும்
தொத்திப் பிணைகையும் தோளெழிலும் காட்டிடினும்
பித்தர் சிதைக்கும் பெருந்தமிழைக் காக்காமல்
ஒத்துக் கொளாதென் உளம்!

நெற்றி வகிரும், நெடுங்கை விரலுகிரும்,
சுற்றிப் பிணையும் சுடர்க்காலும் காட்டிடினும்
முற்றி முதிர்ந்த முழுத்தமிழைப் பேணாமல்
பற்றிப் படரவிடேன் பார்!

-1960

13  தமிழர்க்குத் தமிழ் உயிர்!

தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
தமிழர்க்குத் தீங்கு செய்யும் !
தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
தருந்தமிழால் தமிழர் தாழ்வார் !
தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
தமிழ்நாட்டைக் கேடு சூழும் !
தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
தமிழ்நாட்டுப் பகைவ ராமே !

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/57&oldid=1512687" இலிருந்து மீள்விக்கப்பட்டது