பக்கம்:கனிச்சாறு 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  39

கொந்தார் மலர்க்கொண்டைக் கோதையரீர்; பாடேமுக்
கிந்தா வெழுந்தேம்என் றென்னா தயர்வீர்போல்,
செந்தா மரைமுகத்தைப் பஞ்சணையிற் சேர்த்தீரால்!
வந்தர் தமிழழிக்க; வாயவிழ்ந்தார் வார்படைக்கே!
செந்தோள் மறவர் சிறுத்தாரென் றேயெழுந்து
முந்துவீர் அன்னை மொழிக்கென்றே ஆர்ப்பரிப்பீர்!
சிந்துவீர் செங்குருதி தாய்மைச் செருக்குலத்தீர்
இந்த நொடியே எழுகேலோ ரெம்பாவாய்! 5

எண்ணற் கினிக்கும்; எடுத்தியம்ப வாயினிக்கும்;
பண்ணு மொழிகேட்பார் செவியினிக்கும் பைந்தமிழை
உண்ணும் சுவடியிலே நஞ்சிட்டார் ஒண்டொடியீர்!
கண்ணென் எழுத்தும் கருத்தும் கலைப்பாரால்
பெண்ணென் பிறவியினைப் பெற்றேமென் றெண்ணாமே
விண்ணதிர ஆர்த்துப் பிடிக்கூட்டம் போலெழுந்து
மண்ணின் உரிமை மொழியுரிமை மீட்குதிரேல்
பெண்ணுரிமை நாட்டுகின்ற பெற்றியலோ ரெம்பாவாய்! 6

வல்லடிமை கொண்டார்; வரும்பொருளிற் பங்கெடுத்தார்;
மல்லடிமை சேற்றில் மனத்தைப் பதமிடுவார்;
சொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்!
இல்லறத்தைத் தள்ளி இளம்பருவச் சீரொதுக்கி
வல்லமற நெஞ்சை வளையா இரும்பாக்கி
ஒல்லைப் பெரும்போர் உலைக்காமே ஏற்றியநாண்
வில்லடியின் மேற்புருவ வேல்விழியே! தூங்குதியே!
எல்லே இளையாய், எழுகேலோ ரெம்பாவாய்! 7

பெற்ற மகர்வாய் தமிழைப் பிலிற்றாமல்
வெற்று மொழியாமோர் வேம்பை - உயிர்கழிக்கும்
புற்றரவ நஞ்சைப் பிழியும் புலையோரைச்
செற்றுச் செருக்காமல் 'சீற்றச் செருவிழி, மூ
டுற்ற மயக்கத் துருண்டும் புரண்டும்நீ
மற்றிங் குறங்கல் அழகோ, மதிமுகமே?
கற்ற தமிழ்மேல் கடுஞ்சூள் உரைசாற்றி
இற்றே இளம்பிடியே நூறேலோ ரெம்பாவாய்! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/66&oldid=1419380" இலிருந்து மீள்விக்கப்பட்டது