பக்கம்:கனிச்சாறு 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


ஒற்றுமை ஒற்றுமை என்றே உரைப்பது
வெற்றுரை மட்டு மன்றே; வீணுரை! 160

ஒன்றை மட்டும் நினைவில் ஊன்றுக.
என்றைக் கென்னினும் எவரிடத் தென்னினும்
அரசியல் நலன்கள் ஆயிரம் வரினும்
பொருளியல் நலன்கள் பூத்துக் குலுங்கினும்
உரிமை யில்லாத் தமிழகம் தமிழர்க்குக்
கருவில் லாத கழிநிலை மலடி!

'துறக்கமே எனக்குச் சிறையாக வாய்ப்பினும்
இறப்பத் தாண்டிக் குதிக்கவே விரும்புவேன்'
எனுமோர் அறிஞன் இயம்புதல் தெளிவாய்!
பினுமுன் பேதைமை பேசுவ தொழிவாய்! 170

ஆகவே தமிழனே! அழைக்கின் றேன், உனை!
சாகவே என்னினும், விடுதலைச் சாவே!
இன்றைத் தமிழகம் அடிமைவிட் டெழுந்தால்
பின்றைத் தமிழகம் பெரும்பயன் எய்தும்!

உன்னை விடுதலைக் கொப்புவித் திடுக!
அன்னை நாட்டினை விடுதலை செய்க!
முன்னைப் பெரும்புகழ் உலகெலாம் முழக்குக!
“என்னைக்கும் என்னை இனத்திற்கும் என்னைப்
பின்னைக்கும் யானே பெரும்புகழாம் நின்றே”னென்
றன்னைக்கும் சொல்லி அத்தனுக்கும் சொல்லி, 180
உன்னைக்கும் உன்னின் உழைக்கும் உறவுக்கும்
பன்னி யுரைத்துப் பலவா றெடுத்துரைத்து
மின்னிப் புறப்படுக மேனிலையை
உன்னி நடத்திடுக, உறுபயன் விளையவே!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/160&oldid=1424782" இலிருந்து மீள்விக்கப்பட்டது