பக்கம்:கனிச்சாறு 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  127


75  இனியேனும் ஒன்றிணைவீர் ?


கதைபேசி, இலக்கியங்கள் சலிக்கப் பேசிக்
கற்பனையாம் பொய், புளுகில், கலைகள் தம்மில்
புதைபட்டீர்; காலமெல்லாம் போக்கி விட்டீர்!
புரைபட்டீர்; சிறைப்பட்டீர்; பார்ப்பான் காலில்
உதைபட்டீர்; வதைப்பட்டீர்; அடிமைப் பட்டீர்!
ஓடோடித் துயர்ப்பட்டீர்! உருப்பட் டீரா?
சிதைபட்டீர், தமிழர்களே! இனிமே லேனும்
சேர்ந்திணைந்து செயல்பட்டே இனங்காப் பீரே!

மண்சுமந்தீர்; கல்சுமந்தீர்; வானை முட்டும்
மாளிகைகள், கோபுரங்கள், கட்டி வைத்தீர்!
விண்சுமந்த முகில்தடவும் காட்டை யெல்லாம்
வெட் டி நல்ல நகராக்கி, வெளிநா டேகிக்
கண்சுமந்த நீர்சுமந்து, கையற் றேங்கிக்
கால் நடையாய்த் துயர்சுமந்து, நெஞ்ச மெல்லாம்
புண்சுமந்தீர் தமிழர்களே! உருப்பட் டீரா?
பொறைசுமந்தே இனியேனும் இனங்காப் பீரே!

புகழ்படைத்த வரலாற்றைப் பொய்யாய்த் தள்ளிப்
புளுகுக்குப் 'புராணங்கள்' எனும்பே ரிட்டுத்
திகழ்கின்ற பெருமையுடன் அவற்றை யெல்லாம்
தெருத்தெருவாய்ப் போய்ச்சொல்லி, பெருமை யோடு
நிகழ்கின்ற விழாக்களிலே ஆரி யத்தை
நிலைநிறுத்தி, அதற்குக்கீழ் நீங்கள் நின்றே
இகழ்தேடும் தமிழர்களே! உருப்பட் டீரா?
இனியேனும் ஒன்றிணைந்தே இனங்காப் பீரே!

கட்டிவைத்த கோயிலுக்குள் - கருவ றைக்குள்
கல்லைவைத்துக் கடவுளெனும் பெரும்பேர் சொல்லி
எட்டிநின்று கும்பிடென்பான்; இளித்த வாயோ
டிலைவிரித்துப் படைத்திட்டு, விழுந்து, முன்னால்
முட்டிதேய் கின்றவரை கும்பிட் டீர்கள்!
மூடர்களே, தமிழர்களே! உருப்பட் டீரா?
அட்டியிலை அவனுயர்ந்தான்! இனிமே லேனுேம்
அனைவீரும் ஒருங்கிணைந்தே இனங்காப் பீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/163&oldid=1416754" இலிருந்து மீள்விக்கப்பட்டது