24 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
14 தமிழா, நீ எங்கே?
ஆரங்கே? தமிழ்மகனா? இங்கே வா, வா!
அன்றிருந்த நின்முன்னோர் தொகுத்தளித்த
பேரங்கே? ஊரெங்கே? பிழைப்பு மெங்கே?
பேச்செங்கே? மூச்செங்கே? விளங்கி நின்ற
சீரெங்கே! சிறப்பெங்கே? முகம் நாணாத
செந்தமிழ்த்தாய் உலாவர நீ செய்து தந்த
தேரெங்கே? வீறெங்கே? இலக்கியஞ் செய்
திறமெங்கே? உரமுற்றும் போன தெங்கே?
கொடையெங்கே? நடையெங்கே? மறவர் ஊர்ந்த
கொல்களிறு சூழ்ந்துவருந் தூவெண் கொற்றக்
குடையெங்கே? படையெங்கே? ஆரங் கென்று,
குரலுயர்த்தி விரல் நீட்டி அயலார்க் கிட்ட
தடையெங்கே? நின்னாணை தவறி னோரின்
‘தலையெங்கே' என்பாயத் தருக்கு மெங்கே?
தொடையெங்கே? பாவலர் தங் கூட்ட மெங்கே?
தொல்பெருமை நின்னைவிட்டுப் போன தெங்கே?
வாய்மையெங்கே? அருளெங்கே? சான்றோர் எங்கே?
வான் தடவி முகில்முட்டுங் கலைகள் எங்கே?
தூய்மையெங்கே? ஒழுங்கெங்கே? கணவற் பேணித்
தொல்மறவக் கூட்டத்தை ஈன்று தந்த
தாய்மையெங்கே? பெண்மையெங்கே? தவறு நேரின்
தம்முயிரை வெறுத்தொதுக்கும் மானமெங்கே?
நோய்மையிலாத் திறமெங்கே? உள்ள மெங்கே?
நொடிக்குநொடி தாழ்ந்தமிழ்ந்து போன தெங்கே?
தந்திறனால் அல்லாமல் உயிர்வா ழாத
தாளெங்கே? ஆண்மையெங்கே? நேர்மை யெங்கே?
செந்தமிழ்த்தீம் பாமணக்கும் வாய்கள் எங்கே?
செழும்பாடல் மகிழ்ந்துண்ணுஞ் செவிகள் எங்கே?
சிந்திசைக்கும் தெருக்களெங்கே? பாணர் எங்கே?
சித்துபயில் துறவோர்தம் மறைகள் எங்கே?
மந்திபயில் சோலைகளும் மலைகள் தாமும்,
மறம்பயிலும் களமாகிப் போன தெங்கே?